எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

0
68

முதல்வருடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் மீதும் ,அமைச்சர்கள் மீதும், ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் ஊழல் எங்கே நடந்திருக்கின்றது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதத்திற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த முதலமைச்சர், ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர வேண்டும் என்று சவால் விடுத்து இருக்கிறார்

இன்றைய தினம், இதற்கு பதிலளித்து இருக்கின்ற திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்குச் சென்ற முதலமைச்சர் கொண்ட கட்சி ஊழலுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, இன்னும் மாறாத ஊழல் கரை இருக்கின்ற கட்சி அதிமுக தான். இந்த கட்சியின் சார்பாக முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமியின் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர தான். அது தொடர்பாக எந்த கூச்சமும் இன்றி நான் ஊழலே செய்யவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சி செய்கிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் குட்கா, மற்றும் கட்டுமான பணிகள் போன்றவற்றில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டிலேயே ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

திமுக மீது நில அபகரிப்பு புகார் என ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. பத்து வருடங்களாக அதிமுக ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் சென்ற நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தானே இருக்கிறார். எத்தனை திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது கொடுக்கப்பட்டு இருக்கின்ற ஊழல் புகாருக்கு நானே அனுமதி கொடுக்கின்றேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என தமிழக ஆளுநர் அவர்களுக்கு கடிதம் இன்று எழுதுங்கள், அடுத்த நிமிடமே விவாதத்திற்கு தேதியும் குறியுங்கள். எந்த இடம் என்று சொல்லுங்கள் அந்த இடத்திற்கு நான் மட்டுமே வருகின்றேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் வாருங்கள் முடிந்தால் ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார் ஸ்டாலின்.