அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

0
82

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதற்கு ஏற்ப ரஜினியின் மக்கள் சேவையை தாராக மந்திரமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன்.

கொரோனா லாக்டவுனில் கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், அவர்களுடைய மறுவாழ்விற்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். புயல், வெள்ளம் என பேரிடர் காலத்தில் கஷ்டப்படும் மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார். , “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றையவை” என்பது வள்ளுவன் வாக்கு. அப்படி அழிவில்லாத சிறந்த செல்வமான கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஏரி, குளங்களை தூர்வாரியுள்ளார். இதனால் கோடை காலத்தில் தாகம் தீர்த்த ஜெயகிருஷ்ணனை காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இன்றளவும் நினைவு கூர்ந்து வருகின்றனர். எதிர்கால இந்தியா மாணவர்கள் கையில் என்றால் அப்துல் கலாம். அதை மெய்பிக்க வேண்டுமென்றால் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வேண்டாமா?. அதற்காக 2012ம் ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடித்த விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 20 பள்ளிகளை தத்தெடுத்து, அதில் 77 ஆசியர்களை நியமித்தார் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். அதுமட்டுமின்றி சிறப்பு வகுப்பின் போது படிக்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதனால் 16 சதவிகிதமாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் 74 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இதேபோல் வேலூரில் 100 ஆசிரியர்களையும், திருவண்ணாமலையில் 20 பள்ளிகளில் 32 ஆசிரியர்களையும் பணியமர்த்தி அவர்களுக்கு மாதச்சம்பளமாக மட்டும் 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை தன் சொந்த பணத்தில் இருந்து செலவிட்டு வருகிறார். மேலும் ஜெ.கே. பவுண்டேஷன் மூலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களுடைய கல்வி செலவு மட்டுமில்லாது உணவு, உடை உள்ளிட்ட பிற தேவைகளையும் கனிவுடன் கவனித்து வருகிறார். இப்படி அடுக்கடுக்கான சேவைகளை செய்து வரும் ஜெ.ஜெயகிருஷ்ணனை பாராட்டி அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.