பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்

0
171
TN Political Party Break the Dream of DMK and Congress Mega Alliance-News4 Tamil Best Online Tamil News Live
TN Political Party Break the Dream of DMK and Congress Mega Alliance-News4 Tamil Best Online Tamil News Live

பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்

பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து வன்னிய மக்களுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன கூட்டத்தில் பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் பாமக நிறுவனர் மற்றும் வன்னியர் மக்களை விமர்சித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தனர். இதை கண்டித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் திமுக கூட்டணி தலைவர்கள் பேசாததை குறிப்பிட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை கண்டிக்கும் வகையிலும் பொன்பரப்பி கலவரத்தில் திமுகவின் சூழ்ச்சி அரசியலை வெளி உலகிற்கு எடுத்து காட்டும் வகையிலும் சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது.

பொன்பரப்பியில் ஒரு சாதாரண பிரச்சனையை சாதிக்கலவரமாக உங்கள் இருபத்தி சொச்சம் ஊடகங்கள் மூலமாக திசைமாற்றி விட்டீர்கள். உங்கள் கூட்டணி கட்சியினரால் பாட்டிலால் வயிற்றில் குத்தப்பட்டு குற்றுயிராக இருப்பவருக்கோ, கொலைவெறி தாக்குதலில் அடிபட்ட மாற்றுதிறனாளிக்கோ இதுவரை ஒற்றை ஆறுதல் வார்த்தை கூட கூற மனமில்லாத உங்களுக்கு வேண்டுகோள் வைப்பது ‘விழலுக்கிறைத்த நீர்’ தான்.

அதிலும் எல்லா வன்முறைக்கும், சமுதாய பதற்ற நிலைக்கும் காரணகர்த்தாவாக நீங்களும் உங்கள் கூட்டணி கட்சி விசிகவும் இருந்துவிட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கே ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று ஆலோசனை சொல்கிறீர்கள்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டவது உங்களுக்கு கை வந்த கலை, “ஏனென்றால் நீங்கள் கலைஞரின் மகன்”. ஆனால் உண்மையை ஊருக்கு சொல்ல வேண்டும் இது எங்கள் கடமை.

முத்தரசன் நக்சலைட்டுகளை போல எங்களை சுட்டுத்தள்ள வேண்டும், எங்களை தடை செய்ய வேண்டும் என்று பேசியதை நீங்கள் அறிவீர். பேச சொல்லியதே நீங்கள் தான் என்பது என் நம்பிக்கை.

சற்குணம் என்கிற நபர் எங்களை மரம்வெட்டி என்றும், பாறாங்கற்களை உருட்டி போட்டு அனைவருக்கும் இடையூறு செய்தவர்கள் என்றும், உங்கள் தந்தை திருடப்பார்த்து ஏமாந்து போன பெருமைமிகு “108 சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு” வாங்கித்தந்த எங்கள் மரு.அய்யாவை ‘நீங்கள் எதில் பெரிய அய்யா’ என்றும், இன்று நீங்கள் திருடப்பார்த்து அவமானம் மட்டுமே அடைந்த பெருமைமிகு “108 ஆம்புலன்ஸ் திட்டத்தை” இந்தியாவுக்கே அளித்த மரு.அன்புமணியை ‘நீங்க எதில் சின்ன அய்யா’ என்றும் கேட்டுள்ளார்.

சற்குணம் பேராயரா? தன்னை சிலுவையில் அறைந்தோர்க்கும் இறைவனாகிய தந்தையிடம் மன்னிப்பு வேண்டிய இயேசுபிரானை பின்பற்றும் ஒரு நல்ல சாமானிய கிறிஸ்துவனாக கூட இருக்க முடியாது. பிறகு எப்படி இவர் பேராயராக இருக்க முடியும்? சற்குணம் பேசிய கேவலமான சாதிவெறி பேச்சை கேட்ட நல்ல கிறித்துவர் யாரும் சற்குணத்தை ஒரு கிறித்துவனாக ஏற்க மாட்டார்கள்.

எப்படி நீங்கள் திமுக என்கிற மிகப்பெரிய வெகுமக்கள் இயக்கத்தில் தகுதியற்ற தலைவராக இருக்கிறீர்களோ, அதுபோலவே எஸ்ரா சற்குணமும் உன்னதமான கிறித்துவத்தில் ஒரு சாதிவெறி ஏறிய பேராயராக இருக்கிறார்.

திரு.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் அனைத்து வன்முறைகளுக்கான காரணங்களையும் அறிவீர்கள். எனவே உங்களுக்கு வேண்டுகோள் வைக்கப்போவதில்லை. சில ஆலோசனைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு பழமொழி பிடிக்கும் என்பதால் சொல்கிறேன் – கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள் – ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டும்’ என்று. ஆக அதுபோல உங்கள் தந்தை ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து ஊரை ஏமாற்றினார், விசாரணை அதிகாரிகளே வியந்து பாராட்டும் அளவுக்கு ‘விஞ்ஞான ஊழல்’ செய்தார். தனியார் ஊடகங்கள் மூலம் எங்களை வன்முறையாளர் என்று வர்ணம் பூசினார். ஆனால் அந்த பொய்கள் எல்லாம் இன்று அம்பலப்பட்டு நிற்கின்றன.

சமூக ஊடகத்தில் உண்மைகள் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் காற்றைவிட, ஒலியை விட வேகமாக பரவும் இந்த காலத்திலும் ‘நம்பியார் காலத்து’ கலகம் மூட்டும் உத்திகளை நீங்கள் பயன்படுத்துவது நகைப்புக்கு உரியது. ஊடகங்களில் எந்த செய்தி வரவேண்டும் என்பதையே தீர்மானிக்கும் சமூக ஊடக தலைமுறை இது. ஆம் இப்போதெல்லாம் ‘யானை வரும் முன்னே மணியோசை வருகிறது பின்னே’

பொன்னமராவதியில் மிகப்பெரிய சாதிக்கலவரம் வந்தபோதும் அதை மூடி மறைத்து, பொன்பரப்பியில் நடந்த தேர்தல் கால மோதலை ஊதி பெருக்கி தமிழகத்தில் வன்முறையின் மூலகாரணமாக இருப்பது திமுக என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து’ நீங்கள் விடும் அறிக்கையை பார்த்தால் மீண்டும் நினைவுக்கு வருவது உங்கள் பழமொழி தான் ‘கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வாங்க. பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா, போக்கத்த பசங்களா’ என்று.

தன் தந்தை போல பேச்சு திறமையோ, பாமக போல சாதனை பட்டியலோ, தொலைநோக்கு திட்டங்களோ, அன்புமணி போன்ற ஆளுமையோ, பேச்சாற்றலோ, திறமையான அடிமட்டத்தில் இருந்து முன்னேறி வந்த வேட்பாளர்களோ, அனுசரணையான கூட்டணியோ இல்லாமல் – சுருக்கமாக சொன்னால் “போக்கத்த ஆளாக” தனியே நின்று புலம்பும் உங்களை பார்த்து கல்லறையில் உறங்கும் உங்கள் தந்தையும் கண்ணீர் விடுவார்.

தனியார் ஊடகங்களும், பண முதலைகளும், ஊழல்வாதிகளும், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற சாதிவெறி வன்முறையாளர்களும் துணை இருக்கும் தைரியத்தில் விஷத்தை கக்க வேண்டாம் ஸ்டாலின் அவர்களே. திமுக என்பது கட்சி அல்ல. ஊழல் காசை மையமாக வைத்து நடக்கும் பன்னாட்டு நிறுவனம். உங்கள் கூட்டம் கூலிக்கு மாரடிக்கும் ‘அற்றகுளத்து அறுநீர் பறவைக் கூட்டம்’. திமுகவில் காசு காலியானால் காக்கை கூட்டம் பறந்து வேறு இடம் போய்விடும். ஆனால் பாமக என்பது வெறும் கட்சி அல்ல. இது குடும்பம். எங்கள் குடும்பத்தலைவர் மரு.அய்யாவின் பின்னால் சாகும் வரை ஒரு பைசா கூட பலன் எதிர்பார்க்காமல் உயிரைக்கூட தரும் கூட்டம்.

உங்கள் அநியாயத்தை யார் பார்க்காவிட்டால் என்ன, நாங்கள் பார்க்கிறோம். யார் கேட்காவிட்டால் என்ன? நாங்கள் கேட்கிறோம். நூற்றாண்டுகளை தாண்டிய வறுமை போராட்டத்தில் இருந்து, 21 உயிர்களை தியாகம் செய்து இட ஒதுக்கீடு பெற்று, 108 சாதிகளோடு சேர்த்து எங்களையும் படுகுழியில் இருந்து மேலே உயர்த்திய எங்கள் மரு.அய்யாவின் தியாகத்தால், போராட்டத்தால் வாழ்வு பெற்று, உரிமை பெற்று டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும், கல்வியாளராகவும், தொழிலதிபர்களாகவும் லட்சக்கணக்கில் உலகெங்கும் வாழும் பாட்டாளிகள் இருக்கிறோம். எங்கள் அய்யாவை அவமானப்படுத்திய அத்தனை பேரையும் அவர் காலில் விழவைத்தது எங்கள் வரலாறு.

ஏற்கனவே செய்த தவறுகளுக்கு 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து கொள்ளையடிக்க அதிகாரம் இல்லாமல் கையை பிசைந்து நிற்கிறீர்கள். உங்கள் வெறுப்பு பேச்சுகள் மூலம் நிரந்தரமாக நீங்கள் எந்த பதவிக்கும் வராமல், திமுக என்கிற இயக்கம் உங்கள் கண் முன்னே வேரோடும், வேரடி மண்ணோடும் அழிந்து சாம்பாலவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே உங்கள் முதல்வர் நாற்காலி கனவு “சீனி சக்கரை சித்தப்பா, துண்டு சீட்டில் எழுதி நக்கப்பா” என்றே முடியும்.

உங்கள் தந்தை எங்களுக்கு சாதிவெறி பட்டம் கட்டியதை கவனித்த நீங்கள், தன் கட்சிக்குள் இருந்த வன்னியர்களை எங்களுக்கு எதிரான துருப்பு சீட்டாக எப்போதும் அரவணைத்தே சென்றார். அதை நீங்கள் கவனிக்கவில்லை. கடைமட்ட திமுக தொண்டன் வரை பொன்பரப்பியின் உண்மையும், உங்கள் நாடகமும் சென்று சேர்ந்துவிட்டது. இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் வட மாவட்டங்களில் திமுக மண்ணை கவ்வும். அப்போது புரியும் திமுக என்கிற யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டதை.

இறுதியாக உங்கள் தந்தையின் அன்புக்குரிய சிலப்பதிகாரத்தில் இருந்து ஒரு வரி, உங்கள் தந்தையே தனது கரகரத்த குரலில் உங்களுக்கு கூறுவதாக படித்துப்பாருங்கள் ஸ்டாலின் –

“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்” என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கடந்த காலங்களில் ஸ்டாலின் உளறியதை வைத்தே அவருக்கு விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

author avatar
Parthipan K