பனிப்பொழிவால் பேரழிவு – பீதியில் டெக்சாஸ் மக்கள்

0
93

அமெரிக்காவில் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவும் மக்களால் தாங்க முடியாத அளவு பனிப்பொழிவும், குளிரும் அங்கு பரவலாக நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். சாதாரணமாக அவர்களால் வெளியில் செல்லவும் இயலவில்லை, சாலைகள் அனைத்தும் ஒரே வெள்ளை மூட்டமாக உள்ளது.

அங்கு உள்ள இடங்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. தற்போது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்னுமிடத்தில் பெருமளவில் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் இயல்பு நிலையை இழந்து தவிக்கிறார்கள். பனிக் கட்டிகளாக இடங்கள் அனைத்தும் உறைந்துள்ளது.

அமெரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள் இப்பொழுது “பனி பிரதேசமாகவே” மாறி உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்து உள்ளார்கள். இது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பனிப்பொழிவால் அமெரிக்கா பேரழிவை சந்தித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். அங்கு நிலவி வரும் பனிப்பொழிவால் பறவையினங்கள், விலங்குகள் அனைத்தும் குளிர் தாங்க முடியாமல் உறைந்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் மக்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கிடைக்காமல், கொட்டி தீர்க்கும் பனியால் உரையும் தண்ணீரை குடிக்காமல், மின்சார வசதியும் இல்லாமல், உருகும் மெழுகினால் வெளிச்சம் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக பனி புயல் அபாயம் உள்ளது என்று அந்நாட்டு வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சில இடங்களில் முன்பாகவே பனிப்புயல் ஏற்பட்டு, பல உயிர் சேதங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் “60 பேர் உயிரிழந்துள்ளனர்” என்பது குறிப்பிடத்தக்கதாகும். பனிப்பொழிவு அதிகரிப்பின் காரணம் ஆராய்ந்த போது ஆர்டிக் பகுதியின் வெப்பம் மிகுதியால் இருக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

author avatar
Parthipan K