முதல்வரின் அந்தப் பயணம்! அச்சத்தில் திமுகவினர்!

0
67

மறைமுக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளில் சிவகங்கை செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் இருக்கின்ற 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் அதிமுக எட்டு இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக என்று இரு கூட்டணிகளும் சம பலத்தில் இருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 11,30 மற்றும் மார்ச் மாதம் 4 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் அதிமுக உறுப்பினர்கள் வராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அதன்படி வரும் 4 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கின்றது.

அதே தினமான நான்காம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கை செல்கின்றார். இதன் காரணமாக தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில தேர்தல் ஆணையத்திற்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிவகங்கை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு அனுப்பி இருக்கின்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக வெற்றி பெற்று விடும் என்ற காரணத்தால் அதிமுகவின் உறுப்பினர்கள் வேண்டுமென்றே தேர்தலை புறக்கணித்தார்கள். இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் முதல்வர் சிவகங்கை மாவட்டத்திற்கு செல்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடியவர் மாவட்ட ஆட்சியர் தான் என்ற நிலையிலே அவரே முதல்வர் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டால் தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு கடந்த மாதம் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தேர்தலை அறிவித்துவிட்டு அதேநாளில் அவர் ஆய்வு கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கின்றார். அப்படியானால் அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. எனவே திட்டமிட்டபடி 4ஆம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இதற்கு இன்று பதில் கூறுவதாக ஆணையர் தெரிவித்து இருக்கின்றார் எனவும் ஆர். எஸ் .பாரதி தெரிவித்திருக்கின்றார்.