கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம்

0
120
Senthil Balaji Criticized Kamal Haasan
Senthil Balaji Criticized Kamal Haasan

கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம்

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையே தான் நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர்.அதே போல திமுக கூட்டணியில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக மற்றும் மதிமுக இணைந்து போட்டியிடுகின்றன.மக்கள் நீதி மைய்யம்,சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஒரு அணியாகவும்,அமமுக மற்றும் தேமுதிக ஒரு அணியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை கவர பல்வேறு கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.அந்தவகையில் திமுகவின் சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார்.முன்னாள் அமைச்சரும்,கரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி “ஸ்டாலின் முதல்வரானதும், மாட்டு வண்டியில் போய் ஆற்று மணலை அள்ளி வரலாம்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் இவர் பேசியதாவது, ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதவியேற்றார் என்றால், 11.05 மணிக்கு மணல் அள்ள மாட்டுவண்டியை எடுத்துக் கொண்டு நீங்கள் ஆற்றுக்குள் ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் உங்களைத் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இங்கே இருக்க மாட்டார்கள் என்று பேசுகிறார்.இவருடைய இந்த பேச்சுக்கு திமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Kamal Haasan Criticise DMK Senthil Balaji
Kamal Haasan Criticise DMK Senthil Balaji

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். என்று செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த விமர்சனத்திற்கு செந்தில்பாலாஜி தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.அதில் கரூர் பகுதியில் உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் விவசாய மக்களின் நலன் கருதி தான் இந்த வாக்குறுதி அளித்துள்ளதாகவும்,கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும் எனவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

இது குறித்து அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,கரூர் மாவட்டத்தில் 15,000 மாட்டுவண்டி விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக, ஆளுங்கட்சி அமைச்சரின் எதேச்சதிகார அடக்குமுறையை எதிர்த்து, என் மாவட்ட மக்களின் குரலாக, என் குரல் எதிரொலித்ததை கண்டு பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதட்டமும் வருகிறது? என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது குறித்து கமல்ஹாசன் அல்லது அவரது வேட்பாளர்கள்,பாஜக அல்லது அதிமுகவினர் யாராவது இங்கு வந்து இது குறித்து பேச முடியுமா என்றும் சவால் விடுத்துள்ளார்.