மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு! முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பு

0
103
MP Thirugnanam
MP Thirugnanam

மூத்த பத்திிக்கையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான எம். பி. திருஞானம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (08.07.2020) மாலை மறைந்தார். மூத்த பத்திரிக்கையாளரான இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் மயிலாப்பூர் எம்.பி. திருஞானம் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவர் எனது நல்ல நண்பர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

நீண்ட நெடுங்காலம் காங்கிரஸ் பேரியக்கத்தில் கொள்கை பற்றோடு செயல்பட்ட எழுத்தாளர், பத்திரிகையாளர் திரு எம்.பி. திருஞானம் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமிழ் தேசியக் கட்சி நாளேடான தமிழ்ச் செய்தியில் அச்சுக் கோர்க்கும் பணியில் சேர்ந்த இவர் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் தலைமையையேற்று அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். பிறகு தமிழ் தேசியக் கட்சி காங்கிரஸில் இணைந்த போது பெருந்தலைவர் காமராஜர் தலைமையையேற்று முழுநேர செயல்வீரராக, ஆற்றல்மிக்க தேசியத் தோழராக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு கடும் பணியாற்றியவர்.

MP Thirugnanam
MP Thirugnanam

எப்பொழுதும் எவரிடமும் தர்க்க வாதங்களை முன்வைத்து கருத்து மோதல்களை நடத்துபவர். ஏற்றுக் கொண்ட கொள்கையிலிருந்து என்றைக்கும் பின் வாங்கியதில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு எம்.பி. சுப்பிரமணியம், திரு வாழப்பாடி கூ. ராமமூர்த்தி அவர்கள் பதவி வகித்தபோது பெரும் துணையாக இருந்தவர். ஒரு கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி பணிகளிலிருந்து குடும்ப சூழல் காரணமாக விலகி முழுநேர பத்திரிகையாளராக மாறினார்.
தொடக்கத்தில் தராசு வார இதழில் சிறப்பு செய்தியாளராகவும், நெற்றிக்கண் வார இதழில் பொறுப்பாசிரியராகவும், ஐ.என்.டி.யு.சி. முழக்கம் என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பத்திரிக்கை டாட் காம் என்கிற இணைய இதழில் சிறப்பு செய்தியாளராகவும் தமது இறுதி காலம் வரை பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு குறைந்த காலத்தில் கூட காங்கிரஸுக்காக கடுமையாக வாதாடும் சுபாவம் கொண்டவர்.

தமிழக காங்கிரஸ் கட்சியினரால் மறக்கமுடியாத அருமை நண்பர் திரு எம்.பி. திருஞானம் அவர்களது மறைவு தேசிய சக்திகளுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam