பட்டப்பகலில் நடந்த கடத்தல்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

0
66

சென்னையை அடுத்த இருக்கின்ற செங்குன்றம் புதுநகர் என்ற பகுதியை சார்ந்த காய்கறி வியாபாரி மாரியப்பன் என்பவருடைய மகன் கணேசன் அங்கே இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அவர் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு செல்லும் சமயத்தில் காரில் வந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை கடத்திச் சென்றது.

இதன் காரணமாக, அங்கே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. மாணவன் கணேசன் கடத்தப்படுவதை கவனித்த அங்கிருந்த மக்கள் அந்த காரை பின் தொடர்ந்து சென்றார்கள் அதன் காரணமாக, கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவருடைய பெயர் சந்தோஷ் குமார் என்று தெரிய வந்திருக்கிறது.

சந்தோஷ் குமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணை செய்ததில் கடத்தப்பட்ட மாணவனின் அக்கா ஜனனிக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னால் பூபதி என்பவருடன் திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் சில கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கணவரை பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது. மனைவியின் குடும்பத்தாரை மிரட்டுவதற்காகவே பூபதி அந்த மாணவனை கடத்திச் சென்றதாக பிடிபட்ட சந்தோஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவரை கடத்திச் சென்ற அவருடைய மாமாவை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள். அதோடு அங்கே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.