கடிவாளம் இட்டும் அடங்காத சசிகலா!

0
68

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் உரையாற்றி அதற்காக அதிமுகவிலிருந்து நேற்றையதினம் 15 முக்கிய நபர்கள் நீக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், சசிகலா உரையாற்றும் மற்றொரு ஆடியோ வெளியாகி இருப்பதாக தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் அவர்களும், கொறடாவாக எஸ் பி வேலுமணி அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உட்பட 15 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதேபோல அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாவிதமான பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இப்படியான சூழ்நிலையில், சசிகலா உரையாற்றும் இன்னொரு ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மதுரை அதிமுக நிர்வாகியிடம் உரையாற்றிய சசிகலா கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள் விரைவில் நான் உங்களை நேரில் சந்திக்கிறேன் கட்சியை மறுபடியும் நல் முறையில் கொண்டு செல்வோம் அதை யாராலும் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

இவர்களைப் போன்று எத்தனையோ பேரை நான் பார்த்து இருக்கின்றேன். 1987-ம் வருடம் எம்ஜிஆர் மறைவின் போது ஏற்பட்ட பிரச்சனையை அம்மாவுடன் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன் அதிலிருந்து மீண்டு வந்து தான் ஆட்சியை பிடித்தோம். அதேபோல மறுபடியும் ஒரு சம்பவம் நடக்கவிருக்கிறது இவர்கள் செய்வது எல்லாம் புதிய செயல்கள் அல்ல. ஜெயலலிதா போல நாமும் தொண்டர்களுடன் வந்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று தெரிவித்திருக்கின்றார். இது சசிகலாவின் 41வது ஆடியோ என்று சொல்லப்படுகிறது.