ஓபிஎஸ் இபிஎஸ் இடையீட்டு மனு மீதான விசாரணை! இன்று வெளியாகவிருக்கும் அதிரடித் தீர்ப்பு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!

0
73

கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முதலமைச்சராக அப்போது பதவி வகித்து வந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார்.கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர். சுமார் 70 நாட்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய இறப்பு தமிழகம் முழுவதையும் புரட்டிப்போட்டது.தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக வலம் வந்தவர் ஜெயலலிதா, அதோடு மட்டுமல்லாமல் அவர் தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதே அடுத்த பிரதமர் ஜெயலலிதாதான் என்ற குரல் தமிழகம் முழுவதும் எழத் தொடங்கியது.இந்த சூழ்நிலையில், அவர் மறைந்த பிறகு அதிமுக யார் கட்டுப்பாட்டிலிருக்கிறது என்று பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டோரிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து சசிகலா கட்டாயத்தின் பெயரில் தான் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்து பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார்.

இந்த சூழ்நிலையில், சசிகலா பக்கம் பெரும்பான்மையான சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக தன்னை நியமனம் செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வருமாறு பன்னீர் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த கோப்புகள் அனைத்தும் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை செய்தவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி.

ஆகவே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சராக பதவியேற்க நினைத்திருந்த சூழ்நிலையில், சசிகலா திடீரென்று சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார். அப்போது அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமனம் செய்து விட்டு அவர் சிறைக்கு சென்றார்.

மேலும் தான் முதல்வராக பொறுப்பேற்கயிருந்த நிலையில் திடீரென்று சிறைக்கு செல்ல நேர்ந்ததால் அந்த முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்துவிட்டு அவர் சிறைக்கு சென்றார்.

அதன் பிறகு கடந்த 2017ஆம் வருடம் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரிடையே உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அதன்பின்னர் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தெரிவிக்க வேண்டும் எனக்கூறி சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

அவர் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த இடையீட்டு மனு மீதான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும், நீதிபதிகள் கேட்டறிந்த நிலையில், இந்த மாதம் 8ம் தேதி தீர்ப்புக்காக அந்த வழக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் நீதிபதி விடுப்பில் சென்ற காரணத்தால், இந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சசிகலா தொடர்ந்த வழக்கு குறித்து பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

இந்த தீர்ப்பின் முடிவு யார் பக்கம் வந்தாலும் அதன்மூலமாக அதிமுகவிலும், தமிழக அரசியலிலும், பல திருப்புமுனைகள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.