தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!!

0
72

தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!!

 

சென்னையில் உள்ள 82  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து தக்காளிகளும் விற்றுத் தீர்ந்ததால் தக்காளியை வாங்க வந்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

 

கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் சில மாநிலங்களில் தக்காளியின் விலை உயர்ந்து வருகின்றது. தக்காளி விலையை கண்டித்து பிற மாநிலங்களில் மக்கள் சில வித்நியாசமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் தக்காளி விலை கிலோ 90 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றது. தக்காளி வரத்து குறைந்த காரணத்தினாலும் மழை காரணமாகவும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

திடீரென்று தக்காளி விலை உயர்ந்ததால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறைக்கு கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் தமிழக ரேஷன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 

அந்த அறிவிப்பின் படி முதல்கட்டமாக சென்னை மாவட்டத்தில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்தார். அதன் படி வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், தென்சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும் என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது.

 

இந்த ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது.  இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் தக்காளியை வாங்குவதற்கு காலை 8 மணிமுதல் ரேஷன் கடைகளில் குவிந்தனர்.

 

தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை காலை 9 மணிக்கு தொடங்கியது. பின்னர் வேகமாக விற்பனைசெய்யப்பட்ட தக்காளிகள் 9.45 மணிக்குள் விற்றுத் தீர்ந்தது. வெறும் 45 நிமிடங்களில் அனைத்து தக்காளிகளும் விற்றுத் தீர்ந்ததால் தக்காளியை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

இதையடுத்து தினமும் ஒரு கிலோ தக்காளி மட்டுமே வாங்க அனுமதி அளித்திருக்கும் நிலையில் தினசரி இரண்டு கிலோவாக அதிகரிக்க வேண்டும் எனவும் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் தக்காளியின் விலையை இன்னும் சற்று குறைக்க வேண்டும் எனவும் கொரிக்கை வைத்தனர். மற்ற கடைகளில் கிலோ 100, 110 என்று விற்கப்படும் தக்காளி ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுவது உதவியாக இருப்பதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.