திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்தின் தலைப்பு ருத்ர தாண்டவம்

0
80

திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு

சில மாதங்களுக்கு முன் தமிழ் திரையுலகமே எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதிக அளவிலான வசூலையும் வாரிக் கொடுத்தது. இந்நிலையில் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனரான மோகன் ஜி தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி அதற்கு முன் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் தனித்துவமான இயக்குனராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு திரௌபதி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளையும் சமாளித்து, படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளையும் வெற்றி கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து நாடக காதலை தோலுரிக்கும் வகையில் அமைந்த இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து வசூலில் சாதனை புரிந்து திரைத்துறையினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுமாறு தமிழக அரசு அறிவித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் திரௌபதி இயக்குனர் மீண்டும் திரௌபதி கதாநாயகன் ரிச்சர்ட்டுடன் இணைந்து புதிய பட வேலைகளை துவங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியின் புதிய தோற்றம் ஒன்றை சமீபத்தில் இயக்குனர் மோகன் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து ஆயுத பூஜை நாளன்று அடுத்த படத்திற்கான தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஆயூத பூஜையான நேற்று அதிகாரப்பூர்வமாக தனது அடுத்த படத்திற்கான தலைப்பை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

ஏற்கனவே நாடக காதல் குறித்து படமெடுத்த இவர் அடுத்து எந்த மாதிரியான படத்தை தர போகிறார் என்பது குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பட தலைப்பையும் போஸ்டரையும் கவனிக்கும் போது மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாகவே தெரிகிறது. திரௌபதி படத்தின் நாயகன் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட பலர் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

author avatar
Ammasi Manickam