வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!

0
613

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேலம் நெடுஞ்சாலையில் பரங்கிப் பேட்டையில் இருந்து சேலம் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் எதிரே வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதியதாக கூறபபடுகிறது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்களும், லாரி ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காரில் வந்தவர்கள் திட்டக்குடி வட்டம் நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் குடும்பத்தினர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைக்கு மொட்டையடிக்க தேவநாதன் குடும்பத்தினர் 8 பேர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டுப் பேரும் படுகாயமடைந்தனர். இதில் ரேவதி, பவானி, பரிமளா மற்றும் லாரி ஓட்டுனர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 5 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K