கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இருந்து பொருட்கள் சூறையாடப்பட்ட விவகாரம்! தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்த காவல்துறையினர்!

0
54

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சூழ்நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்m மாணவியின் மர்மமான மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பு நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது.

இதில் 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது சரமாரியாக சர்க்கரை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் தனியார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்த வாகனங்கள் பொருட்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன் தீ வைத்தும் எரித்தனர்.

இந்த கலவரத்தை பயன்படுத்தி கொண்டு பள்ளிக்கு அருகே இருந்த பல்வேறு கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் பள்ளிக்கு வந்து பள்ளி வளாகத்திலிருந்த மேஜைகள், நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பெஞ்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி இயந்திரங்கள், கணினிகள் என கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிச் சென்றனர்.

இப்படியான சூழ்நிலையில், கலவரம் நடந்த சமயத்தில் தனியார் பள்ளியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பள்ளி வளாகம் அருகே எடுத்து வந்து போட்டு விட்டு செல்லுமாறு சின்ன சேலம் வருவாய் துறை அதிகாரிகள் ஏற்பாட்டினடிப்படையில் பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளியை சுற்றி இருக்கின்ற கணியான்மியூர், விலங்கம்பாடி, வினைதீர்த்தபுரம், இந்திலி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்டோரா அடித்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து கலவரம் நடந்த போது பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் அந்த பொருட்களை மறுபடியும் கொண்டு வந்து பள்ளியில் போட்டுவிட்டு செல்லுங்கள். இல்லையென்றால் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று குரல் எழுப்பிய படி அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த தண்டோராவிற்கு பயந்தாவது தனியார் பள்ளியிலிருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மறுபடியும் பெற்றுவிடலாம் என வருவாய் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா அல்லது ஆகாதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.