கடந்த 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களின் சாராம்சங்கள் என்னென்ன?

0
113

நேற்று முன்தினம் அதிமுகவின் தலைமையை தேர்வு செய்வதற்காக அந்த கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ், ஓபிஎஸ், உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

ஓபிஎஸ், இபிஎஸ்க்கு முன்னதாகவே அந்த மண்டபத்திற்கு வருகை தந்தார். அவர் மண்டபத்திற்கு வருகை தந்தபோது அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக கடந்த புதன்கிழமையன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை இல்லை என்று தெரிவித்தது.

மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பினடிப்படையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்களை ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தார்கள். அப்படி அனுப்பி வைக்கப்பட்டிருந்த 23 தீர்மானங்களிலும் தன்னுடைய ஒப்புதல் கையெழுத்தை போட்டார் பன்னீர்செல்வம்.

மேலும் இந்த 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த வாசகத்தையும் இந்த தீர்மானத்தில் இணைக்கக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார் பன்னீர்செல்வம்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதாவது அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் அந்த 23 தீர்மானங்களில் இருக்கும் அம்சங்களை தவிர்த்து வேறு எந்த அம்சங்களையும் அந்த தீர்மானத்தில் புதிதாக இணைக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழிநெடுகிலும் அவரை வரவேற்று அவர் வாகனம் மீது பூக்களை தூவினர்.

சற்றேறக்குறைய 1 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமி 11 மணியளவில் பொதுக்குழு நடைபெறவிருந்த தனியார் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அதற்கு முன்பாகவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழு ஆரம்பமானது அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் வழங்கியிருந்த 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அறிவித்தார்கள்.

அதோடு இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் கழக அமைப்பு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு செயல்பட்டு வரும் நிர்வாகிகளுக்கு ஒப்புதலும் அங்கீகாரமும், வழங்கும் தீர்மானம் முதலாவதாக இடம்பெற்றிருந்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்தது, விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க தவறியது, அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை போடுவது, திராவிட மாடல் என்ற பெயரில் கபட நாடகம் ஆடுவது, என்று திமுகவை கண்டித்து தனித்தனி தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தனர்.

புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கட்ச தீவை மீட்டெடுக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய, மாநில, அரசுகளுக்கு வலியுறுத்தும் தீர்மானம்.

அதோடு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பு என்ற பெயரில் குடும்ப முதலீட்டை செய்த திமுக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வருவோம். சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் என்ற தீர்மானமும் இதில் இடம்பெற்றிருந்தது.

மேலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது விரைந்து வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், அதோடு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும், தெரிவிக்கும் தீர்மானம் இடம்பெற்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது.