இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட கோரிக்கை!

0
46

இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட கோரிக்கை!

தமிழகத்தில், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைந்ததையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் மூன்றாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக, கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக, கடந்த 1ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்:-

மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கோடை விடுமுறை வருகிறது. கொரோனா காலக் கட்டம் காரணமாக, 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது சந்தேகமே. அவர்களுக்கு தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பும் குறைவு.

எனவே, கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும். எனினும், ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தலாம். பொதுத் தேர்வு எழுத உள்ள 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K