ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா?

0
216
Reasons for Salem Collector Rohini Transfer-News4 Tamil Online Tamil News Channel
Reasons for Salem Collector Rohini Transfer-News4 Tamil Online Tamil News Channel

ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா?

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி  எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென்று அவர் ஏன் மாற்றப்பட்டார் என்ற காரணம் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. இந்நிலையில் அவர் மாற்றபட்டதிற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற ரோகினி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பணிகளை எல்லாம் சிறப்பாக செய்து வந்தார். ஆனால் மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அவர் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் பிரசாரத்துக்காக அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் மாவட்டம் வந்த போது கோட்டை மைதானத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் சாலையின் இரு புறமும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அது தேர்தல் விதிமுறையை மீறியது என்று சொல்லி அதை அகற்ற மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போதும் மாவட்ட ஆட்சியர் ரோகினி விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இரண்டடுக்கு பாலம் துவக்க விழாவில் எதிர்க்கட்சியான திமுகவின் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்பதிலும் மாவட்ட ஆட்சியராக ரோகினி உறுதியாக இருந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இப்படி தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் ஆட்சியர் ரோகினி அதிரடியாக மாற்றப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. இதனையடுத்து மாற்றத்திற்கு பிறகு தற்போது  ரோஹினி தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


author avatar
Parthipan K