இந்தியா வந்த ரபேல் போர் விமானம்

0
51
ரபேல் போர் விமானம் இன்று இந்தியாவுக்கு வந்தது. பிற்பகல் 2 மணிக்கு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின. அரேபிய கடலில் கடற்படை போர்க்கப்பல் அதனை வரவேற்றன.
ரபேல் வருகையால் அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அங்கு புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானப் படையில் 5 ரபேல் விமானங்கள் இணைந்த பின்னர், வான்படைத் திறனில் இந்தியா அண்டை நாடுகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக திகழும் என்பது உறுதியாகி உள்ளது. ரபேலால் விமானப்படையின் போர்த் திறனை அதிகரித்து, தெற்காசிய நாடுகளுக்கிடையே இந்தியாவின் பலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 1997 ல் ரஷியாவின் சுகோய் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டதற்குப் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதியாகும் முதலாவது போர் விமானம் ரபேல் ஆகும்.
நம்மிடம் உள்ள மிராஜ் 2000 மற்றும் சுகோய் விமானங்கள் மூன்று அல்லது நான்காம் தலைமுறை விமானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரபேல் விமானம் நான்காவது தலைமுறை விமானம் என பட்டியலிடப்பட்டுள்ளது. ரபேல் எதிரியின் ரேடார் கண்களுக்கு புலப்படாது என்பது சிறப்பு அம்சமாகும். பிரான்ஸ்,எகிப்து, கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரபேலை வைத்துள்ள 4-வது நாடாக இந்தியா மாறி உள்ளளது. ரபேல் விமானங்களுக்கான பராமரிப்பு வசதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு விமானப்படை சுமார் 400 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. அதே நேரம் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான 5 ஆம் தலைமுறை ஜெ-20 போர் விமானங்களுடன் ரபேலை ஒப்பிட முடியாது என்பதும் கவனிக்கத்தக்கதாகும், இந்த விமானங்களை சீனா தனது வான்படையில் விரைவில் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது வந்துள்ள 5 விமானங்கள் தவிர்த்து 13 ரபேல் விமானங்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள்ளும், எஞ்சிய விமானங்கள் 2022 ஏப்ரல்-மே மாத வாக்கிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
author avatar
Parthipan K