இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

0
110

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரன் தன்னுடைய படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பல ரூபங்களில் கலக்கியவர் ராஜ்கிரன். தற்போது அவர் நடிக்கும் குபேரன் படத்தின் மூலம் பாடல் ஆசிரியராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியதைப் பற்றி சுவையான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தனது பதிலில் ‘ நான் என் ரசிகரின் ஒருவரின் திருமணத்துக்காக மதுரைக்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்து ஹோட்டல் அறையில் தங்கி இருந்தேன். எனக்கு மறுநாள்தான் ரயில் என்பதால் பொழுது போக்குவதற்காக எனது ரசிகர் ஒருவர் நான் ஒருவரை அனுப்புகிறேன் என்றார். அப்படி வந்தவர் தான் வடிவேலு.

வந்ததில் இருந்து பேசிப்பேசி என்னை இரண்டு நாட்களாக சிரிக்க வைத்தார். அதன் பின் இரு வருடங்கள் கழித்து நான் ராசாவின் மனசிலே படத்தை எடுத்த போது ஒரு கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். அப்போது எனக்கு அவரை அறிமுகப்படுத்திய நபரை அழைத்து உடனே வடிவேலுவை வர சொன்னேன்.

வந்த வடிவேலு கவுண்டமணியிடம் அடிவாங்கும் போது நாங்கள் சொல்லிக் கொடுத்த வசனத்தை மட்டும் பேசாமல் தானாகவும் சில வசனங்களை பேசினார். அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. இவர் சினிமாவில் சாதிப்பார் என்று. அதன் பின் நடந்தது எல்லாம் கடவுள் நடத்தியதுதான். அதனால் அவரை நான் அறிமுகப்படுத்தினேன் என சொல்ல முடியாது’ என மனம் திறந்து பேசியுள்ளார்.

author avatar
Parthipan K