முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்! ரசிகர்களிடையே பரபரப்பு!

0
64

எதிர்வரும் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி தொடர்பான விவரங்களை அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் முன்னரே தெரிவித்திருந்த நிலையில் , ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதியே அண்ணாத்த படக்குழுவில் கொரோனா பரவிய காரணத்தால், படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடந்து வந்தது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் 8 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தனி விமானம் மூலமாக படப்பிடிப்பிற்கு வந்த அனைவரையும் அழைத்துச் சென்று எங்கும் செல்லக் கூடாது யாரையும் சந்திக்க கூடாது என்று கடும் நிபந்தனைகளோடு தான் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள்.

ஆனாலும் சன் பிக்சர்ஸ் தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி அண்ணாத்த படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கின்றது ரஜினிகாந்த் அவர்களுக்கு பரிசோதனையின்போது, நெகட்டிவ் என முடிவு வந்திருக்கிறது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்தி வைக்கப் பட்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ரஜினி தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா உடன் ஹைதராபாத் போயிருந்தார். ஒவ்வொரு தினமும் அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளை அவருடைய மகள்தான் கொடுத்து வந்தார். முன்னரே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் ஒரு நாளைக்கு 14 மாத்திரைகள் உட்கொண்டு இருக்கின்றேன். என்று ரஜினி தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கும் ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆட்களோடு இருந்திருப்பது அவருடைய குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் அவர்களுடன் கடந்த சில நாட்களில் நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள நினைத்த ரஜினிகாந்த் அதன் பின்பு தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார். சென்னைக்கு திரும்ப முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வரும் 31ஆம் தேதி அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையிலே, ரஜினி தன்னை பத்து நாட்கள் முதல் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு செய்தால் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவாரா? அல்லது அந்த தேதி தள்ளி போகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்த பிறகு தான் தெரியவரும் என்று சொல்கிறார்கள்.