தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

0
89

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இது பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம் தான் என்று விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டன அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது போன்று தன்னுடைய கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதாவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பில் சந்தேகத்தை அதிகமாக்கியது அதிலும் ரஜினிகாந்த அறிவிக்கும் அந்த நொடி வரையில் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் தான் இருந்து வந்திருக்கின்றார் அதற்குப் பின்னரே பாஜக அர்ஜுனன் மூர்த்தியை விடுவிக்கிறது என்ற அறிவிப்பும் வெளியாகின்றது.

முன்னரே பல நேரங்களில் ரஜினி பாஜகவின் குரலாகவே இருக்கின்றார் அமித்ஷாவும் மோடியையும் கிருஷ்ணர் அர்ஜுனர் என புகழ்ந்து இருக்கின்றார் சேலத்தில் பெரியார் ஊர்வலம் பற்றி சர்ச்சை கருத்தை கூட வெளியிட்டார் மத்திய அரசு உடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தன்னை பாஜகவின் மறு உருவமாகவே வெளிப்படுத்தி இருக்கின்றார் ரஜினிகாந்த். ஆனாலும் அதே நேரம் எனக்கு யாரும் காவி சாயம் பூச இயலாது எனவும் தெரிவித்தார் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு இருக்கின்றது என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த். இவ்வாறு இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் கூட ரஜினிகாந்த் பாஜகவை நோக்கி தான் பயணிக்கிறார் என்ற கருத்தும் பொதுவாக இருந்து வந்தது.

ஒரு நடிகர் என்ற முறையில் ரஜினிகாந்தின் இந்த செயல்பாடுகள் அரசியல்வாதியாக தொடருமா என்பது தான் அனேக நபர்களுக்கு இப்போது இருக்கும் கேள்வி. ஒருபுறம் அர்ஜுன மூர்த்தியை நிற்க வைத்திருக்கும் ரஜினிகாந்த் காமராஜருடன் பழகிய காங்கிரஸில் இருந்தது காந்திய மக்கள் இயக்கத் தலைவரான தமிழருவி மணியனை இன்னொருபுறம் நிறுத்தி இருக்கின்றார். இதே தமிழருவிமணியன் தான் 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கு அளித்தவர் என்பதை மறந்து விட இயலாது. இப்படி நடிகர் என்ற ரீதியிலும் அரசியல்வாதி என்ற ரீதியிலும் ரஜினிகாந்தின் செயல்பாடுகளில் பாஜகவின் தாக்கமானது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

அதேசமயம் சமீபத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ரஜினிகாந்த், நம்முடைய மன்றத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், தலித் சகோதரர்கள், போன்றோர் இருந்து வருகிறார்கள். அதன் காரணமாக நாம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை ஆதரிக்க இயலாது என்று தெரிவித்திருக்கின்றார்.

அவ்வாறானால் ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு என்ன? எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற விஷயத்தில் ரஜினிகாந்த் தெளிவாக இருக்கின்றார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜகவோடு கூட்டணி அமைப்பது என்பது அரசியல் தற்கொலை முயற்சி என்பதை தன்னுடன் பேசும் அரசியல் பிரமுகர்களிடம் தனிப்பட்ட முறையில் அடிக்கடி தெரிவித்து வருகின்றார் ரஜினிகாந்த். ஆகவே அவரே அவ்வாறு ஒரு அரசியல் தற்கொலை முயற்சியை செய்ய மாட்டார்.

அதேசமயம் பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர்களான அமித்ஷா, மோடி, போன்றோருக்கு எதிரான நிலைப்பாட்டில் ரஜினிகாந்த் இருக்கவில்லை. தன்னுடன் இந்தியில் பேசும் தமிழக தலைவராக ரஜினிகாந்த் இருப்பது அமித்ஷாவுக்கு மிகவும் எளிதாக இருக்கின்றது அதன் காரணமாக ரஜினியோடு பாஜகவினர் நெருக்கமாக இருக்கின்றார்கள் ஆகவே தமிழ்நாட்டின் நிலைப்பாடு பற்றி ரஜினியும் அமித்ஷாவிடம் தெரிவித்துவிட்டார். இதன் அடிப்படையிலேயே நீங்கள் பாஜகவோடு கூட்டணி அமைக்க வேண்டாம் தனித்து போட்டியிடுங்கள் என்று பாஜக ரஜினிகாந்திடம் தெரிவித்து விட்டதாக தெரிகின்றது.

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ரஜினியை நிற்க வைத்து அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் அற்புதத்தை செய்யவேண்டும். அவ்வாறு செய்ய இயலாமல் போனால் திமுகவை ஆட்சிக்கு வர இயலாமல் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது ரஜினிகாந்திற்கு பாஜக கொடுத்திருக்கும் வேலை அதற்கான அனைத்து உதவிகளையும் ரஜினிகாந்திற்கு செய்வதாக உறுதி அளித்து இருக்கின்றது பாரதிய ஜனதா.

அதேபோல் சட்டசபை தேர்தலில் தான் பாஜகவுடன் கூட்டணி கிடையாது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன் என்று பாஜகவிற்கு உத்திரவாதம் தந்திருக்கின்றார் ரஜினிகாந்த் இதுதான் பாஜகவிற்கு ரஜினிக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தம்.