தமிழகத்தில் வெகுவாக குறைந்த பருவமழை!

0
75

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமானது, அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய 17 சென்டிமீட்டர் மழை என்ற இயல்பான அளவைவிட அதிகமாக அதாவது 29% அதிகரித்திருக்கின்றது. 22 சென்டி மீட்டர் என்ற அளவில் மழை ஒட்டுமொத்தமாக பதிவானது. ஆனால் அதற்கு அடுத்த மாதமான நவம்பர் மாதத்தில் மழை ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நதி மற்றும் குளம், ஏரி, அனை,உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. பலபகுதிகளில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. அந்த மாதத்தில் தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய 17 சென்டிமீட்டர் என்ற அளவை விட 137 சதவீதம் அதிகமாக அதாவது 42 சென்டி மீட்டர் மழை பெய்தது.

இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகள் ஆறுகள் அணைகள் குளங்கள் உள்ளிட்டவை நிரம்பின அதன் ஒரு பகுதியாக இந்த மாதத்திலும் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து மழை குறைவாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மழைபொழிவு வெகுவாக குறைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதே சமயம் வட கிழக்கு பருவ காற்று காரணமாக, இன்றைய தினம், நாளை தினமும், கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

நாளை மறுநாள் தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், வடமாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரையில் இன்று வானம் லேசான மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று 8:30 உடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் செய்யாறு பகுதியில் 7 செண்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் பகுதியில் 6 சென்டி மீட்டர் மழையும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும், திருமானூர், சமயபுரம், திருக்காட்டுப்பள்ளி, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழையும், கொள்ளிடம், உத்திரமேரூர், அரிமளம், ஜெயங்கொண்டம், சீர்காழி, திருப்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், ஆரணி, திருவண்ணாமலை, திருவையாறு, பரங்கிப்பேட்டை, தாம்பரம், கரம்பக்குடி, குன்னூர், உள்ளிட்ட பகுதிகளில் 2 சென்டி மீட்டர் மழையும், சென்னை விமான நிலையம், சிவகாசி, வேதாரண்யம் ,உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வருடம் பருவமழை வருகின்ற ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் வரையில் நீடிக்கலாம் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இனி வரக்கூடிய தினங்களில் மழை எந்த அளவு இருக்கும் என்பது தொடர்பாக இதுவரையில் வானிலை ஆய்வுமையம் எந்தவிதமான முன்னறிவிப்பும் வெளியிடவில்லை.

பருவமழை ஆரம்பித்த அக்டோபர் மாதம் முதல் நேற்று வரையில் தமிழ்நாட்டில் பதிவாகியிருக்கின்ற மழையின் அளவு 60 சென்டிமீட்டர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 45 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆகவே இது இயல்பை விட 71 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.