இடிமின்னலுடன் மழை, கடல் சீற்றம்! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

0
53

இடிமின்னலுடன் மழை, கடல் சீற்றம்! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

அதுபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (ஞாயிற்று கிழமை) முதல் செவ்வாய்கிழமை வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் பூமத்தியரேகை ஓட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K