நீட் தேர்வுக்கான உள்ஒதுக்கீடு கிடைப்பதில் சிக்கல் – கண்கலங்கிய நீதிபதி!

0
64

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பட்டியல் தயாரிப்பதில் தாமதம் காட்ட முடியுமா என்று மதுரை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கிராமப்புற மாணவர்களின் வேதனைகளையும், வருத்தங்களையும் அளவிடற்கரியது என்று கூறி நீதிபதி கண்கலங்கினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டிய மனு எந்த நிலையில் உள்ளது, நடப்பாண்டிலேயே மாணவர்களுக்கு ஒதுக்கீடு கிடைக்குமா என்பது குறித்த விசாரணை இன்று நடந்தது. அப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மனு சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனைக்கு  வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைக்கேட்ட நீதிபதிகள் சட்டமன்றத்தில் அனைத்து கட்சி சார்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை  ஆதரித்துள்ளனர் என்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினர். சட்ட மசோதா ஆளுநரை விரைவில் முடிவு எடுக்கும்படி உத்தரவிட முடியாது என்று அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இடையில் குறுக்கிட்டு, ‘முடிவெடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் போதாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி மாணவர்களின் தேர்வுக்கான முடிவுகள் வெளிவந்து, சேர்க்கை முடிந்தபின்னர் முடிவெடுத்து என்ன பயன் உள்ளது’ என்றும் கேட்டுள்ளனர்.

உள் ஒதுக்கீடு விரைவில் வழங்கப்பட்டால் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை மருத்துவத்துறையில் அதிகரிக்கும் என்பதை நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வாறு இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, “அரசுப் பள்ளி மாணவர்களின் வேதனைகளையும், வருத்தங்களையும் அளவிடற்கரியது” என்று கூறி நீதிபதி கிருபாகரன் அவர்கள் கண் கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K