நிறைவு பெற்றது 16 வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு! எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது தெரியுமா?

0
72

நாட்டின் 16வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவும், போட்டியிட்டனர்.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும், சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில சட்டசபையிலும், வாக்குப்பதிவு நடந்தது. டெல்லியில் நடந்த வாக்குப்பதிவில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் நரேந்திர மோடி வாக்களித்து வாக்குப்பதிவை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, அனுராக் தாகூர், உள்ளிட்டோர் வாக்களித்தார்கள். அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் ஹேமா மாலினி உள்ளிட்ட உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்.

உடல் நலக்குறைவு காரணமாக, பாதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீல் சேரில் நாடாளுமன்றத்திற்கு வந்து உதவியாளர்கள் உதவியுடன் வாக்களித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்பஜன்சிங் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சட்டசபை குழு கூட்ட அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு மையத்தில் காலை 10 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தார். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து டெஸ்ட் சார்ஜ் செய்யப்பட்ட சூழ்நிலையில் அவர் நேரடியாக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து வாக்களித்தார் என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலினையடுத்து அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் வாக்களித்தார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்.

மாலை 4 மணிக்கு மேல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அமைச்சர் நாசர், பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் பிபிடி கிட் அணிந்து கொண்டு வந்து வாக்களித்தார்கள்.

அதேபோல நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சாரதுறை அமைச்சர் ஆர் கே சிங் வெளியிட்டவர் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து வாக்களித்துச் சென்றார்கள்.

மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 771 பேரும், சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் சுமார் 4,025 பேரும், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள்.

இதில் ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுவை, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட 12 சட்டப்பேரவைகளில் நடந்த வாக்குப்பதிவுகளில் 100% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் விமான மூலமாக டெல்லியில் இருக்கின்ற நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் பார்வையாளரான சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் வாக்கு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

அதன் பிறகு அங்கிருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தில் அதிகாரிகள் அருகிலேயே வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை மறுநாள் காலை 11 மணியளவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.