வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

0
105

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

பழவேற்காட்டில் நள்ளிரவில் மீனவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதால் பெட்ரோல் குண்டு வீசினார்களா அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா, முன்விரோதம் காரணமாக எதாவது நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மீனவரான மகிமைராஜ். இவர் மீன் மற்றும் இறால் விற்பனை செய்து வருகிறார். நேற்று நள்ளிரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவரது வீட்டின் சுற்றுச்சுவருக்குள் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் அலறியடித்து வந்த மகிமைராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். எனினும் இருசக்கர வாகனம் முழுமையாக தீக்கிரையான நிலையில் கார் பகுதியளவு தீயில் கருகியது. இவ்வாறு மீனவர் கார், இருசக்கர வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கண்ணாடி பாட்டில் துண்டுகள் உடைந்த நிலையில் சிதறி கிடைப்பதால் பெட்ரோல் குண்டு போல மீனவர் வீட்டில் மர்ம நபர்கள் வீசினார்களா அல்லது வாகனங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து சென்றனரா எனவும், இந்த முன்விரோதத்திற்கான காரணம் என்ன எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் அக்கம்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.