ஆளுங்கட்சியினரை அதிரவைத்த பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை!

0
87

வருடம்தோறும் ஆளும் கட்சி சார்பாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக நடப்பதுதான்.

ஆனாலும் மாநிலத்தை சார்ந்த ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் வருடம்தோறும் நிழல் நிதி அறிக்கை என ஒன்றை தாக்கல் செய்து அந்த நிழல் நிதி அறிக்கைகள் மூலமாக பல்வேறு முக்கிய அம்சங்களை புகுத்தி அதன் மூலமாக ஆளுங்கட்சியை சிந்திக்கவைக்கும் ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.

பாட்டாளி மக்கள் கட்சி வருடம்தோறும் வெளியிடும் நிழல் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்து ஆளும் கட்சியினருக்கு கூட முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஆளும் கட்சியினருக்கு சவால் விடும் விதத்தில் பல்வேறு திட்டங்களை அந்த நிழல் நிதி நிலை அறிக்கையில் வெளியிடும் பாட்டாளி மக்கள் கட்சி. இதன் காரணமாக, ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் கூட வாயடைத்துப் போவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு விழா சென்னையில் நேற்றையதினம் நடைபெற்றிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி வரவேற்றார், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட, துணைப் பொதுச்செயலாளர் ஏ கே மூர்த்தி, கே.என். சேகர் பொருளாளர் திலகபாமா, சமூகப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்ற முக்கிய அம்சங்கள் என்னவென்று தற்சமயம் பார்க்கலாம்.

70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்காக 50 ஆயிரம் கோடியும், நீர்வளத்துறைகாக 20 ஆயிரம் கோடியும், செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் 60 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். தஞ்சை, வேலூர், திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக வேளாண் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம் வேளாண் விளை பொருள் கொள்முதல் ஆணையம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் வேளாண் துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டு வேளாண்மை தோட்டக்கலை வேளாண்மை சந்தை உள்ளிட்ட அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விவசாயப் பொருட்களை இரவு 8 மணிக்கு மேல் அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டணம் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் போன்ற 296 திட்டங்கள் இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது இந்த வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் அதனை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும்.

இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் போது தமிழ்நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என தெரிவித்திருக்கிறார். சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 40 திட்டங்களில் 26 திட்டங்கள் இதுவரையில் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியும், இதுவரையில் ஆண்டுகொண்டிருந்த கட்சியும், கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதிகாரம் மற்றும் பணபலத்ததுடன் ஆட்சியிலிருக்கும் மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் இவர்களுக்கு மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி நேர்மையான முறையில் போட்டியிட்டு பல்வேறு பகுதிகளை கைப்பற்றி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வில்லை என்று தெரிவித்திருக்கின்ற அவர், வாக்குகளை சதவீதத்தைக் கொண்டு பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சியை ஒப்பிட வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் பரவலாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஒரே மாதிரியான கருத்துக்களையும், சித்தாந்தங்களையும், கொண்ட மாற்றத்துக்கான கூட்டணிதான் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் ஆட்சியில் அமரும் என்று தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.