இந்திய தேசத்தின் இரும்பு மனிதரை உருவாக்கிய இரும்பு பெண்மணி!

0
111

ஒரு பெண்ணாக ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கி அந்த குழந்தையின் வாழ்வில் அந்த குழந்தைக்கு அனைத்தையும் கிடைக்கச் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல, அப்படி செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

அந்த விதத்தில் தன்னுடைய வாழ்வின் மிகப்பெரிய தூண் என்றும், தன்னுடைய முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வருபவர் என்றும், தன்னுடைய தாய் தொடர்பாக பல இடங்களில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் தன்னுடைய 100வது வயதை எட்டியிருக்கிறார் இதனை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் பற்றி நாம் இங்கே காணலாம்.

குஜராத் மாநிலம் மேசனா நகரை அடுத்த விஸ்நகரில் கடந்த 1922 ஆம் வருடம் பிறந்தவர் ஹீராபென் தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த அவர், பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு மிகவும் இளம் வயதிலேயே வித்நகரைச்சார்ந்த தாமோதர தாஸ் முல்சந்த் என்ற டீ விற்பனையாளரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் 1 மகள் பிறந்தனர் அதில் 3வது மகனாகப் பிறந்தவர் தான் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.

ஏழ்மையான சூழ்நிலையிலும் கல்வி பயில வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தினாரே தவிர தனக்கு உதவ வேண்டும் என்று எப்போதும் தன்னுடைய தாய் கூறியதில்லை என்று ஒரு கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

எப்பொழுதும் உணவை வீணாக்கக் கூடாது என்பதில் தன்னுடைய தாய் என்றும் கட்டுக்கோப்பாக உள்ளதாகவும், தானும் அதனைப் பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தன்னுடைய ஊர் குளத்தில் குளிப்பதில் மிகவும் ஆர்வமுடன் இருக்கும் நரேந்திர மோடி ஒருமுறை அங்கே குளித்தபோது தான் பிடித்த முதலை குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்.

ஆனால் அது பாவச் செயல் என்று தனது தாய் கூறியதால் முதலை குட்டியை மோடி மறுபடியும் குளத்திலேயே விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைவதையும் மற்றவர்களின் துன்பங்களை போக்கும் விதமாக இருப்பதையும் தன்னுடைய தாயார் விரும்புவார் என்று மோடி கூறியிருக்கிறார்.

மற்ற சகோதரர்களை விட வித்தியாசமாக செயல்பட்ட போதிலும் கூட விருப்பமானதை செய் என தெரிவித்து மோடியை அவருடைய தாய் ஊக்குவித்திருக்கிறார்.

முதல் முறையாக தன்னுடைய வீட்டை விட்டு இளைஞராக மோடி வெளியேறிய போதும் கண்கலங்கிய நிலையில், மனதிற்குப் பிடித்ததை செய் என்று தன்னுடைய தாய் வாழ்த்தி அனுப்பி வைத்தார் என்று கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

உறுதியான முடிவுகளை மேற்கொள்ள தனக்கு தன்னுடைய தாய் தன்னை ஊக்குவிப்பதாகவும், முதன் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது ஒருபோதும் லஞ்சம் வாங்காதே என்று அவரது தாய் கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் தாயார் தன்னுடைய மகனுடன் எப்போது தொலைபேசியில் உரையாற்றினாலும் எந்தவிதமான தவறும் செய்யாதே. யாருக்கும் தீங்கு செய்து விடாதே, ஏழைகளுக்கு பணியாற்று, என்று தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்பினால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், தனிப்பட்ட வாழ்வில் நேர்மையையும், கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தன்னுடைய மகனிடம் அவருடைய தாய் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுவரையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவருடைய தாய் 2 பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று கொண்டுள்ளார். 2016 ஆம் வருடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது தன்னுடைய தள்ளாத வயதிலும் பழைய ரூபாய் நோட்டுக்களுடன் ஏடிஎம் வாசலில் நின்று தன்னுடைய மகனின் அறிவிப்புக்கு மோடியின் தாயார் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.