விடுதி காப்பாளர் டார்ச்சர் தாங்க முடியாமல் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி சாவு!

0
58

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் இவருடைய மகள் லாவண்யா 17 வயதுடைய இவர் தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டியில் இருக்கின்ற தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அதோடு அங்குள்ள பள்ளி விடுதியில் அவர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மாணவி லாவண்யா சம்பவத்தன்று திடீரென்று விஷம் குடித்தார் என்றும் சொல்லப்படுகிறது. உடனடியாக அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் மருத்துவமனையில் மாணவியிடம் விசாரணை செய்திருக்கிறார்கள், அப்போது விடுதியில் தன்னை வேலை செய்யுமாறு தெரிவித்ததால் தான் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி காப்பாளர் சகாயமேரியை கைது செய்தார்கள். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்த விடுதி காப்பாளர் மீது கொலை வழக்கு பதிய படலாம் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு பள்ளி நிர்வாகம் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.