தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

0
190
T. Velmurugan
T. Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நான் நினைத்திருந்தால் அமைச்சராகியிருக்க முடியும். அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.இது கூட்டணி கட்சியான திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் நிதியும்’ என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வேல்முருகன்,நான் நினைத்திருந்தால் இந்த அமைச்சரவையில் கூட அமைச்சராகி இருக்க முடியும். திமுகவில் தற்போது இருக்கக்கூடிய பாதி அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து சமீப காலத்தில் வந்தவர்கள் தான். அவர்களெல்லாம் என்னைப்போல பேச்சுத் திறமையோ அல்லது லட்சக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டக்கூடிய வல்லமையோ பெற்றவர்கள் கிடையாது.

T Velmurugan
T. Velmurugan

மாவட்டங்களில் அந்தந்த இடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காக தான் அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து சமீபத்தில் வந்த செந்தில்பாலாஜிக்கு திமுகவில் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கும்போது வேல்முருகன் கேட்டால் கிடைக்காதா என்ன? அதிமுகவில் இருந்து வந்து சேகர்பாபுவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் போது இந்த வேல்முருகனுக்கு கிடைக்காதா..?

1989 இல் பாமக உருவாவதற்கு முன்னால் திமுக தான் எங்கள் குடும்பம் அந்த பழக்க வழக்கத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்று என்னுடைய கட்சியை நான் உங்கள் கட்சியுடன் இணைக்கிறேன் எனக்கு ஒரு அமைச்சர் பதவி தாருங்கள் என்று கேட்டால் அவர் கொடுக்காமல் போய்விடுவாரா?

அவ்வாறு கட்சியை இணைத்து அமைச்சர் பதவி பெற்று வலம் வந்திருக்க முடியும்.ஆனால் அது அல்ல வேல்முருகன். இந்த வேல்முருகனுக்கு பதவி பணம் பவுசு இது எதுவும் தேவை கிடையாது. தமிழ் சொந்தங்கள் முன்னேற வேண்டும் அதுதான் என் குறிக்கோள் என பேசினார்.

வன்னியர்களை ஆளும் அரசு புறக்கணிப்பது,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கடந்து சில நாட்களாக திமுகவை நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேல்முருகன் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வேல்முருகன் தற்போது செந்தில்பாலாஜி மற்றும் சேகர் பாபு குறித்து நேரடியாக விமர்சித்திருப்பது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கட்சியை திமுகவுடன் இணைத்து அமைச்சர் பதவியை பெறுவதாக பேசியதால் இது கட்சியை இணைப்பதற்கான முன்னோட்டமா என அவரது கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றியுள்ளது.