ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன்! எடப்பாடி காட்டம்! ரவிந்தரநாத் கட்சியிலிருந்து நீக்கமா?

0
67

தமிழகத்திலிருக்கின்ற அரசியல் கட்சிகளை குடும்ப அரசியலை முன்னெடுக்கும் ஒரு கட்சி என்றால் அது திமுக என்ற பெயர் கருணாநிதியின் காலம் தொட்டே இருந்து வருகிறது.

திமுகவை தொடங்கிய அறிஞர் அண்ணாதுரை காலத்தில் திமுக தமிழக அளவில் மிகப் பெரிய கட்சியாக விளங்கியது. அதோடு தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு காட்சியாக இருந்தது.

அதன்பிறகு அறிஞர் அண்ணாதுரை மரணமடைந்ததை தொடர்ந்து அப்போது திமுகவின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த கருணாநிதி அந்த கட்சியின் தலைமைக்கு வந்தார். பின்பு தன்னுடைய 40 வயதிலேயே தமிழகத்தின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பிறகுதான் திமுகவின் தன்மை முற்றிலுமாக மாறுபட தொடங்கியது. திமுகவில் கருணாநிதியின் குடும்பத்தினர் மெல்ல, மெல்ல. ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

அந்த வகையில் கருணாநிதியின் மகனும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை திமுக என்ற கட்சி கருணாநிதியின் குடும்ப சொத்தாகவே மாறிப்போய்விட்டது.

கருணாநிதியின் காலத்தில் தான் இப்படி என்றால் ஸ்டாலின் தற்போது முதல்வர் ஆகி இருக்கக் கூடிய சூழ்நிலையில் அவர் தன்னுடைய மகனான உதயநிதி ஸ்டாலினை கட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். கருணாநிதி முதலமைச்சராக முதன் முதலாக பதவியேற்றபோது ஸ்டாலினை எந்த பதவியில் அமர்த்தினாரோ அதே பதவில்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக செல்வாக்கு மிக்க தொகுதியாக விளங்கிவரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுவிட்டார்.

மறுபுறம் அதிமுகவை எடுத்துக்கொண்டால் அரசியல் வாரிசு என்று எம்ஜிஆரின் குடும்பத்திலிருந்து யாரும் அந்த கட்சிக்குள் வந்ததில்லை.

எம்ஜிஆர் அந்த கட்சி தோற்றுவித்த நாள் முதல் கட்சிக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் வழங்கி அவர்களுக்கு தான் முக்கிய இடத்தை வழங்கி வந்தார்.ஆகவேதான் அதிமுக தலைமை எப்போதும் திமுகவை குடும்ப அரசியல் கட்சி விமர்சனம் செய்து வந்தது.

ஆனால் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுக தனது நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறுபட தொடங்கியது. அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் தமிழகத்தில் அதிமுக சார்பாக அந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்ற ஒரே நபர் ரவீந்தரநாத் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் குடும்ப ஆதிக்கம் அதிமுகவில் மெல்ல, மெல்ல, அதிகரிக்கத் தொடங்கியது என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாநில வளர்ச்சி குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு எடுத்துக் கொண்டு தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.

அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், அதிமுகவைச் சேர்ந்த ஓபிஎஸ் அவர்களின் மூத்த மகன் ரவீந்திரநாத் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் எல்லோருமே ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்காக வருகை தந்திருக்கிறீர்கள் இந்த ஆட்சி அமைந்த போது நான் குறிப்பிட்டு ஒரு விஷயத்தை தெரிவித்திருந்தேன் என கூறியிருக்கிறார்.

அதாவது இது என்னுடைய அரசு இல்லை நம்முடைய அரசு என தெரிவித்தேன் நம்முடைய அரசு என்ற மிகப்பரந்த உள்ளத்துடன் நீங்கள் அனைவரும் இங்கே வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நம்முடைய மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை வழங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்தார் முதலமைச்சர், அதன்பிறகு கூட்டமும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து எல்லோரும் கலைந்து சென்றனர் ,ஆனால் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் திடீரென்று முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சென்று விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் ஸ்டாலின் அவரை வரவேற்றதுடன் இருவரும் வெகு நேரம் தனியாக உரையாடியதாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், தேனி மக்களவைத் தொகுதிக்கு தேவைப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மனு வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது பாரதியார் கவிதை புத்தகத்தை முதலமைச்சருக்கு ரவீந்திரநாத் பரிசாக வழங்கியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் மகன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசியிருக்கும் சம்பவம் அதிமுகவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அதேநேரம் ஓபிஎஸ் மகன் திடீரென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கோபமுற செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம் எனவும், அதன் மூலமாக அதிமுகவில் கடைசி கட்ட யுத்தம் நடைபெறலாம் என்றும், பரவலாக பேசப்படுவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.