OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

0
71
OPS remark about Sasikala became a big controversial in politics

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வரும் சசிகலா அவர்கள் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

இந்த விசயமானது அ.தி.மு.க. கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா அவர்களிடம் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். சசிகலாவுடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும், மீறி வைத்தால் கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க-வின் பொன்விழா கொண்டாடப்படும் நிலையில், சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி உள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா அவர்கள், பின்னர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் ‘அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா’ என்ற கல்வெட்டும் வைக்கப்பட்டிருந்ததஉ. அடுத்தக்கட்டமாக சசிகலா அவர்கள் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளரான முன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சசிகலாவுக்கு அ.தி.மு.க கட்சியில் இடமில்லை. அவர் பொழுது போகாமலல் பேசிக் கொண்டு இருக்கிறார். சூரியனை பார்த்து… என தொடங்கும் ஒரு வரியை சொல்லி, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதில் அளித்தார்.

அ.தி.மு.க. கட்சி என்பது நாங்கள் மட்டும் தான். சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நீதிமன்றமும் கூறிவிட்டது, தேர்தல் கமி‌ஷனும் கூறி விட்டது என்று பேட்டி அளித்தார்.

இந்த சூழலில் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவழ்கள் நேற்று மதுரையில் அளித்த பேட்டியில், “சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?” என்ற கேள்விக்கு “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் விருப்பம் ஆகும். அ.தி.மு.க. என்பது டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த இயக்கம். அது தொண்டர்களின் இயக்கமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்றார்.

அப்போது சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்ச்சித்து பேசியிருப்பதை குறித்து கேட்டதற்கு, அரசியலில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று கூறினார்.

இந்த பேட்டியானது அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேட்டி குறித்து அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி அவர்கள் நேற்று பேட்டி அளித்தார்.

அதில், சசிகலா அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என தெளிவான முடிவை அ.தி.மு.க. கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். எனவே சசிகலா அவர்களை மீண்டும் அ.தி.மு.க கட்சியில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என்று கூறினார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்திருந்தார். அதில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் இருந்து சசிகலா அவர்களஉ ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டார். அதில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திதான் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலில் வெளியே வந்தார் என்றும் கூறி இருந்தார். அ.தி.மு.க.வில் சசிகலா விவகாரம் இப்போது பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து இதற்கு நேரெதிராக உள்ளது. இந்த நிகழ்வானது, அ.தி.மு.க கட்சியில் விவாத பொருளாக மாறியுள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகள் இதில் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அ.தி.மு.க.வின் பொதுக்குழுவானதுவருகிற டிசம்பர் மாதம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலாவை சேர்ப்பதா? வேண்டாமா? என்பது குறித்த விவாதம் கண்டிப்பாக இடம்பெறும். இதில் ஒரு முடிவும் தெரிந்து விடும்” என்று தெரிவித்தார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை மவுனம் காப்பதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமிஅ அவர்கள் வருகின்ற 30-ந்தேதி மதுரை செல்கிறார். அங்கிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

அப்போது அவர், பத்திரிக்கை நிருபர்களை சந்திக்கும் போது சசிகலா விவகாரம் குறித்து தெளிவுப்படுத்துவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்தும் தனது நிலைப்பாட்டை குறித்தும் விலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K