ரஜினியின் முடிவை வரவேற்ற துணை முதல்வர்!

0
51

சுமார் கால் நூற்றாண்டு காலமாக அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் 31ம் தேதியன்று கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும். இந்த முடிவானது ரஜினி மக்கள் மன்றத்தின் இருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்து காத்திருந்த என்னுடைய ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும், ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்னை மன்னித்து விடுங்கள் என அறிவித்து கட்சி ஆரம்பிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்றார். தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்தேன். ஜனநாயகத்தில் கட்சி ஆரம்பிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. இப்பொழுது உடல்நிலையை கருத்தில் வைத்து அவர் எடுத்த முடிவுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். உடல்நிலை நன்றாக இருந்தால் தான் சிறப்பாக செயலாற்ற இயலும், என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார்.