இலங்கைக்கு எதிரான ஒரு நாள்  போட்டி! ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லை!

0
72

இலங்கைக்கு எதிரான ஒரு நாள்  போட்டி! ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லை!

கவுகாத்தியில் நடக்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான டி20 போட்டியில் இந்திய அணி இலங்கையை 2-1 என்ற வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

அடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக தற்போது முடிந்த டி20 மற்றும் வங்களாதேசத்திற்கு எதிரான தொடரின் போது விலகி இருந்த கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் முன்னாள் கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெற்று இருந்தனர். இதனையடுத்து முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி கணக்குடன் ஆட்டத்தை தொடங்குமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுப்பற்றிய பிசிசிஐயின் செய்தி குறிப்பில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் தொடருக்கு முன்னதாக அணியில் சேர இருந்த பும்ரா பந்துவீச்சை  வலுப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும்.  எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய மூத்த தேர்வு குழு அவருக்கு பதிலாக வேறு யாரையும் அணியில் சேர்க்கவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில்,  சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹில், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்