தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்வு!

0
64

தென்னாப்பிரிக்க நாட்டில் முதல்முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய்தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தற்சமயம் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று நோய் பரவி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 600 க்கும் அதிகமானோர் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 34 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 பேர் குணமடைந்துவிட்ட சூழ்நிலையில், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இன்று சூழ்நிலையில், நேற்றைய தினம் மேலும் 11 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் அதிக ஆபத்தான நாடுகளில் இருந்து வந்த 4 பேரும், அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வந்த 3 பேரும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேரும், என ஒட்டு மொத்தமாக 11 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். இவர்களில் 6 பேர் சென்னை கிண்டியில் இருக்கின்ற கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

ஒரு நபர் தனியார் மருத்துவமனையிலும், திருவள்ளூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் மூன்று பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்து இருக்கின்றார். இதன் மூலமாக தமிழகத்தில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு 45 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுவரை 24 பேர் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள், 21 பேர் தற்சமயம் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதனை தவிர்த்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எஸ் ஜீன் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அவர்களுடைய மாதிரிகள் புதிய வகை நோய் தொற்று பரிசோதனைக்காக மத்திய அரசின் மரபு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.