ஒடிசா இரயில் விபத்து எதிரொலி! இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!!

0
190
#image_title

ஒடிசா இரயில் விபத்து எதிரொலி! இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!

ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையும் அறிவித்துள்ளார்.

சென்னை எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகள் பற்றியும் களநிலவரம் குறித்தும், ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா அவர்களிடம் காணொலி வாயிலாக கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் “மூன்று இரயில்கள் மோதி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்து நாட்டையும் நாட்டு மக்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அமைச்சர்கள் உதய்நிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா சென்றுள்ளனர். மீட்பு படையினர் ஒடிசாவில் தங்கி மீட்பு பணிகளை தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “ரயில் விபத்தில்  உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாயும், விபத்தில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் நிவராண நிதியாக வழங்கப்படும். இரயில் விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் தேவையா உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.