வன்னியர் இட ஒதுக்கீடு கண்துடைப்பா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ்!

0
118
OPS
OPS

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 21 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தங்கள் சமூகத்திற்கு மட்டும் தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென 40 ஆண்டுகளாக பாமகவினர் போராடி வந்தனர். ஆனால் அதிமுக இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்ததால் கூட்டணியை விட்டு பாமக விலகும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். மேலும் அதற்கு இரண்டே நாட்களில் ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழிலிலும் வெளியானது.

இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் நிறைவு பெற்று அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதே நேரத்தில் வன்னியர் சமூகத்திற்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கியது மூக்குலத்தோர் உள்ளிட்ட பிரிவினரை அதிமுகவிற்கு எதிராக திருப்பியுள்ளது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசியல் லாபத்திற்காக மட்டுமே கையில் எடுத்துள்ளதாகவும், தேர்தல் முடிந்த பிறகு அந்த அறிவிப்பு காற்றி பறக்கவிடப்படும் என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூக்குலத்தோர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் போது வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து பேசினால் இருக்கும் வாக்குகள் போய்விடும் என்பதால் அமைச்சர்கள் பலரும் மாறி, மாறி பேசியது வன்னியர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமே வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பாமகவினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது வேறும் இடைக்கால ஏற்பாடு தான் என்றும், சாதிவாரிய கணக்கெடுப்பிற்கு பிறகே நிரந்தரமான உள் ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகும், அதுவரை இது இறுதியானது அல்ல என அப்படியே அந்தர் பல்டி அடித்து பேசியுள்ளார். வாக்கு பெட்டியில் வன்னியர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதற்கு முன்பே இப்படி மாற்றி, மாற்றி பேசும் அதிமுக தலைமையைக் கண்டு பாமக மற்றும் அதன் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

author avatar
CineDesk