செவ்வாய் கிரகத்தில் உணரப்பட்ட சத்தம்! இப்படித்தான் இருக்கும் என பதிவு செய்து அசத்திய நாசாவின் விண்கலம்!
நம் அறிவியலாளர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உள்ளது. நமது பூமி கிரகத்தை தவிர வேறு கிரகங்களிலும் மனித உயிர்கள் வாழ சாத்திய கூறுகள் உள்ளதா? அல்லது அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கு வழிவகை உள்ளதா? எனவும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
அதற்காக கடந்த ஆண்டு ஜூலை 30 ம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலமானது, கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ஜெசேரோ பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதியதை தொடர்ந்து, அந்த ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியை ஆய்வுக்கு பயன்படுத்த நாசா தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா தொடர்ந்து வெளியிட்டு வந்தது. செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள் மற்றும் படிமங்கள் ஆகியவற்றை இதுவரை இல்லாத அளவு மிக துல்லியமான தரத்தில் இந்த புகைப்படங்களில் நம்மால் காண முடிகிறது.
இந்த நிலையில் ரோவர் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிவாங்கி மூலம் செவ்வாய் கிரகத்தில் பதிவு செய்யப்பட்ட சத்தங்களை பெர்சவரன்ஸ் என்ற விண்கலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள சரளைக் கற்கள் மீது ரோவர் கருவி ஏறும் போதும், அங்கிருக்கும் கற்களை ரோவர் கருவி தன் கதிர்வீச்சின் மூலம் உடைக்கும் போதும் பதிவான சத்தங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 5 மணி நேரத்திற்கும் மேலான சத்தங்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இவை அனைத்தும் அடுத்த கட்ட ஆய்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1450473059199062016