உக்ரைன் மீது படையெடுப்பா? ஐ.நா.வில் ரஷ்யா பரபரப்புத் தகவல்!

0
122

உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோ குழுவில் உக்ரைனை இணைக்கும் விவகாரத்தில், ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. இதனால், உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை இணைக்க வேண்டும் என இருக்கும் ஐரோப்பிய ஒன்றியங்களும், இங்கிலாந்தும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன.

ரஷ்யா படைகளை குவித்துள்ளதால், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளையும், நேட்டோ நாடுகள் மற்றும் அமெரிக்கா அனுப்பியுள்ளன. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள், நவீன ஆயுதங்களை வழங்கி வருவதால், ரஷ்யாவை எதிர்கொள்வதற்காக உக்ரைன் வீரர்கள் போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு அவையில், உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இதையடுத்து, ரஷ்யாவின் ஐ.நா.தூதர் வசிலி நெபென்சியா உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைபாடு என்ன என்பதை ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்களுக்கு விவரித்தார். அதில், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என உறுதிப்பட தெரிவித்தார். அதே நேரத்தில், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு அவையில் தெரிவித்தது போன்று, படையெடுக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என்றால், உக்ரைன் நாடும், அங்குள்ள மக்களும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.