நாடாளுமன்றத்தில் நிறைவேறியது முக்கிய மசோதா! சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன்

0
61
Nirmala Sitharaman Passes Insurance Amendment Bill 2021
Nirmala Sitharaman Passes Insurance Amendment Bill 2021
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது முக்கிய மசோதா! சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன்
தற்போது காப்பீட்டு துறையில் இருக்கும் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பான 49 சதவீதத்தை 74 சதவீதமாக உயர்த்தும் காப்பீட்டு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவானது, கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது.
இந்நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், “காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பானது, கடந்த 2015 ஆம் ஆண்டு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அன்னிய முதலீடானது பெருகியது. குறிப்பாக ரூ.26 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு வந்தது.
மேலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசே கொடுத்து விடுகிறது. ஆனால், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேவையான நிதியை அவர்களே சொந்தமாக திரட்ட வேண்டிய நிலை உள்ளது. மேலும் இக்கட்டான நேரங்களில் அந்த நிறுவனங்கள், திவால் போன்ற பிரச்சினைகளையும் சந்திக்கின்றன. குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கு வளர்ச்சி மூலதனம் கிடைக்காவிட்டால் நிலைமை மேலும் சிக்கலாகி விடுகிறது. அதை தவிர்க்கவே இந்த துறையில் அன்னிய முதலீட்டு உச்சவரம்பை உயர்த்த வேண்டி உள்ளது.
இதுமட்டுமல்லாமல் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பும் காப்பீட்டு நிறுவனங்களின் கஷ்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையுடன் தான் அன்னிய முதலீடு உயர்த்தப்பட்டுள்ளது” என்றும் அவர் பேசினார்.
பின்னர் மக்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது, காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அப்போதைய அரசு உயர்த்துவதை எதிர்த்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் விவாதம் முடிந்த பிறகு, இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மசோதா நிறைவேறியது. ஏற்கனவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியுள்ளதால், தற்போது இரு அவைகளின் ஒப்புதலையும் இந்த மசோதா பெற்று விட்டது.