தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்! மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

0
69

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கியது, இந்த கூட்டத்தொடர் நடந்து வருகின்ற சூழ்நிலையில், நாள்தோறும் எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளையும், ஒத்தி வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பொது மக்களின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது, மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று எண்ணி மக்கள் பிரதிநிதிகளாக உங்களுக்கு வாக்களித்து டெல்லிக்கு அனுப்பினால் அங்கே சென்று ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்யாமல் நாடாளுமன்றத்தையும், சட்டசபையையும் முடக்குவதிலேயே குறியாக இருக்கிறீர்களே என்று சாதாரண மக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, மாநிலங்களவை செயல்பட முடியாமல் ஒட்டுமொத்தமாக முடங்கி இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கின்ற இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.