நீட் தேர்வு! வருகிறது புதிய சட்ட முன்வடிவு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு!

0
77

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதனடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான சூழல் தொடர்பாக ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு பெற்றுக்கொண்டது.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் மாணவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் குழப்புகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வந்தார்.நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு தேர்வு என்ற காரணத்தால், ஆட்சி பேதம் எதுவும் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக இணைந்து இதனை ரத்து செய்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் .நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வருகின்ற அரசு மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் பெயரை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதோடு நீட் தேர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தான் நம்முடைய லட்சியமாக இருக்கும் என்று நாம் சொல்லியிருந்தோம். அது தொடர்பாக நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும். இது குறித்த விளக்கங்களாக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் குழுவின் அறிக்கையை சட்டரீதியாக பரிசீலித்து அதனை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.