5 ரூபாய் டாக்டர்..! இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான சேவை மனிதர் “மருத்துவர் ஜெயச்சந்திரன்’ பற்றிய சிறு தகவல்.!!

0
88

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலபதி தெருவில் வசித்தவர் மருத்துவர்.ஜெயச்சந்திரன், இவரை 5 ரூபாய் டாக்டர் என்று எல்லோரும் அழைப்பது மிக பிரபலமான ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் 2 ரூபாய்க்கும், பின்னர் 5 ரூபாய்க்கும் கடைசி காலத்தில் 10 ரூபாய்க்கும் மருத்துவம் பார்த்த மாபெரும் சேவகராவார். காசிமேடு, வண்ணாரப்பேட்டை, கொடுக்கையூர் பகுதி மக்கள் இவரது குறைந்த மருத்துவ சேவையில் குணமாகி வந்தனர்.

ஒட்டுமொத்தமாக 30 ஆண்டுகள் குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை அளித்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது 71 வது வயதில் உயிரிழந்தார். இவரது சேவையை அறிந்த மக்கள் 2 ரூபாய் டாக்டர் என்றும் 5 ரூபாய் டாக்டர் என்றும் அவரை கெளரவித்தனர். அவரது இறப்பிற்கு பிறகு இந்த சேவை தொடராது என்று பலர் நினைத்தனர். ஆனால் டாக்டர் ஜெயச்சந்திரனின் மனைவி வேணி’யும் அவரது இரண்டு மகன்களும் டாக்டர்கள்தான். இவர்கள் மூவரும் இணைந்து அதே மருத்துவ கட்டணத்தோடு இன்றும் மருத்துவ சேவை புரிந்து வருகிறார்கள்.

டாக்டர் வேணி ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் சூப்பிரன்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மகன் சரத்ராஜ் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இவர்கள் எந்த கட்டணமும் கேட்பதில்லை. மாறாக டாக்டர்.ஜெயச்சந்திரன் படத்திற்கு முன்பாக விரும்பிய பணத்தை வைத்துவிட்டு செல்லலாம்.

இதுகுறித்து டாக்டர்.வேணி கூறியதாவது; என் கணவர் இருந்தபோதே நாங்களும் சிகிச்சை செய்து வந்தோம். அவரது மறைவிற்கு பின்னர் அந்த சேவையை நானும் என் மகன்களும் தொடர்ந்து செய்து வருகிறோம். அவர் இருந்த போது தினமும் 200 நபர்களுக்கு மேல் மருத்துவ சிகிச்சை பெற்றனர். தற்போது தினசரி 30 பேர் வருகின்றனர். இந்த மருத்துவமனை காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை செயல்படுகிறது. காலையில் டாக்டர் வேணி சிகிச்சை அளிக்கிறார். மற்ற நேரங்களில் அவரது மகன்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்களுக்காக மருத்துவ சேவை செய்த 5 ரூபாய் டாக்டர்.ஜெயச்சந்திரன் அவர்களின் புகழ் கடைசிவரை தொடரும் என்பதற்கு அவர்களின் குடும்பத்தினரின் தொடர் மருத்துவ சேவை உதாரணமாக அமைந்துள்ளது. மருத்துவ சேவையில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாய் இருந்தவரை இன்று தேசிய மருத்துவர்கள் தினத்தில் நினைவுகூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

author avatar
Jayachandiran