நெய்வேலி விபத்து: முதல்வர் நிதியுதவி! என்.எல்.சி நிறுவன அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை!

0
86

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பணி செய்திருந்த போது 2வது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் பயங்கரமாக வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபத்து அங்கு நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் என்.எல்.சி பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயங்களுடன் உள்ளவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கிய பணியாளர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் காரணமாக 2வது அனல்மின் நிலையத்தின் மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran