வன்னியர்களின் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசிய சரத்குமாருக்கு நாடார் சங்கங்கள் எதிர்ப்பு

0
141
Sarathkumar
Sarathkumar

வன்னியர்களின் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசிய சரத்குமாருக்கு நாடார் சங்கங்கள் எதிர்ப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் அவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளார். மேலும் இவர் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து கமல் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கப் போவதாக கூறியிருந்தார்.

விரைவில் தேர்தல் வர இருப்பதால் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அதில் அதிமுக அரசை பற்றி பல்வேறு குறை கூறி வந்தார். அப்பொழுது வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு அவசர அவசரமாக கொடுத்தது ஒரு நாடக வேலை என்றும், வன்னிய மக்களின் ஓட்டுக்களை வாங்கத்தான் முதல்வர் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டார் எனவும் பேசியிருந்தார்.

மேலும் 10.5% இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு “தென் தமிழ்நாட்டிலும், மேற்கு தமிழ்நாட்டிலும்” கூட படிக்கவும் ,வேலைக்கும் இடம் கிடைக்கும்.10.5% உள் ஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு தூத்துக்குடியில் வேலையா? என்ன சட்டம் யா இது? என்று வன்னியர்களின் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியிருந்தார்.

இந்த காணொளியானது வைரலாகவே வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார்கள். அதேபோல் தற்பொழுது அகில இந்திய சத்திரிய நாடார் சங்கம் சார்பில் வீரமணி நாடார் அவர்கள் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

நேற்று தூத்துக்குடியில் நடந்த தங்களது கட்சிக்கூட்டத்தில் வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றி தாங்கள் பேசிய வீடியோ பார்த்தேன்.MBC பிரிவினருக்கு உள்ள 20% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக தான் தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயமான வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இந்த MBC பிரிவு கூட 21வன்னியர்களின் உயிரைக்கொடுத்து உருவாக்கப்பட்டதே.

இதனால் BC பிரிவிலுள்ள நாடார்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை,எப்போதும் சமத்துவம் பேசிக்கொண்டு,தேர்தல் வந்தால் மட்டும் நாடார்கள் நிறைந்து வாழும் தென்மாவட்டங்களில் வட்டமிடும் தாங்கள் தங்களது அரசியல் லாபத்துக்காக தேவையில்லாமல் வன்னியர்களுக்கெதிராக நாடார்களை கொம்பு சீவி விட முயற்சிக்க வேண்டாம்.

முன்னொரு காலத்தில் தங்களை தலையில் வைத்துக்கொண்டாடிய நாடார் சமுதாயத்தின் மேல் தங்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் மருத்துவர் இராமதாசை போன்று தாங்களும் நாடார்களின் இட ஒதுக்கீட்டுக்காக நீண்ட கால போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.

நாடார்கள் மேல் நன்மதிப்பு கொண்டிருப்பதால் CBSE பாடத்தில் நாடார்களை இழிபடுத்தியிருந்த பாடப்பகுதியை நீக்க சட்ட போராட்டம் நடத்தி சாதித்தவர் மருத்துவர் இராமதாசு.அப்போது தாங்கள் எங்கே போயிருந்தீர்கள்?

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை தமிழகத்தின் இரண்டாவது பெரும்பான்மை சமுதாயமான நாடார்களுக்கு 15% தனிஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை தொடங்குங்கள்
நாடார்கள் தங்கள் பின்னால் அணிவகுப்பார்கள்,அப்படிச் செய்யாமல் நோகாமல் நொங்கு திண்ண நினைக்கும் தங்கள் எண்ணம் இனி ஒருபோதும் நிறைவேறாது ex-நாட்டாமை அவர்களே, என்று தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.‌

author avatar
Parthipan K