சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

0
78
Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!
Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். முதல் தளத்தில் பிரபுவின் அக்காவும், தாயாரும் தங்கியுள்ளனர். இரண்டாம் தளத்தில் பிரபுவின் குடும்பம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு திடீரென்று ஷாலினி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவர்கள் வந்தனர். அவர்களிடம் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் பிரபுவின் உடல்நிலையை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மேலும் இறந்தவரை ஆம்புலன்சில் ஏற்ற மாட்டோம் என்றும் கூறினார்கள்.

மேலும் அவர்கள் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் காரணமாக அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணை நடத்தியபோது பிரபுவின் காது உள்ளங்கை ஆகிய இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்தது.  அதையொட்டி ஷாலினியை விசாரித்தனர். அப்போது ஷாலினி நள்ளிரவு நேரத்தில் எங்களது வீட்டிற்கு மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் எனது தாலியை பறிக்க முயன்ற போது நான் படிக்கட்டில் உருண்டு விழுந்து விட்டேன்.

அதன் காரணமாக மயங்கியும் விட்டேன். நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது கணவர் இறந்து உள்ளார். மர்ம ஆசாமிகளையும் காணவில்லை என போலீசில் கூறியுள்ளார். ஷாலினியின் தாலிக்கொடியும் கொள்ளை போகவில்லை. ஆனால் அறுபட்டு இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து நகைகளோ அல்லது பணமோ எதுவும் தொலைந்து போகவில்லை. இதன் காரணமாக போலீசாருக்கு ஷாலினியின் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக அக்கம்பக்கத்தினர் மற்றும் பிரபுவின் உறவினர்களிடம் விசாரிக்கும்போது, பிரபு கடையை மூடி கொண்டு வரும்போது வாசல் கதவு மற்றும் வீட்டின் மேல் கதவு ஆகியவற்றை மூடிவிட்டு தான் வீட்டின் உள்ளே செல்வார். அதன் காரணமாக மர்ம நபர்கள் யாரும் வீட்டிற்குள் வர வாய்ப்பே இல்லை என்று அனைவரும் உறுதியாக  கூறியுள்ளனர். மேலும் ஷாலினி தினமும் செல்போனில் அதிகநேரம் செலவிடுவாரம்.

அதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரபு அவரது செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவருகிறது. அப்போதிலிருந்தே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்ற கூடுதல் தகவல்களும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. விசாரணையின்போது ஷாலினியும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் போலீசாருக்கு வலுவான நிலையில் இருக்கிறது.

அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் கொள்கின்றனர். ஷாலினியின் பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்தபோது அவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஒரு இளைஞருடன் நெருக்கமான நட்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தன் கணவன் தனது செல்போனை பறித்து கொண்ட பிறகும் கூட ஷாலினி வேறு ஒரு ரகசிய செல்போன் மூலம் அந்த நபருடன் நட்பில் இருந்துள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ளார். ஆண் நண்பர், ரகசிய செல்போன் ஆகியவற்றையும் இணைத்து சந்தேகப்படுகின்றனர்.

பிரபுவின் சடலமும் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சாலினியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், அதிலிருந்து சென்ற கால்கள் போன்ற தரவுகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.