லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!  

0
197
#image_title

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!  

மோட்டார் சைக்கிளில் லாரி மோதியதால் கீழே விழுந்து ஆசிரியர் மீது லாரி ஏறியதில் கணவர் கண் முன்னே அவர் பலியானார்.

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி வயது 49. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

நேற்று விஜயலட்சுமி தனது கணவருடன் வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்களது மோட்டார் சைக்கிள் அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு-வானகரம் பிரதான சாலையில் வரும்போது எதிரே வந்த லாரி இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறியதால்  பின்னால் அமர்ந்திருந்த விஜயலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதனால் அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னால் லாரி சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.