உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து இன்றுவரை 10 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை!

0
90

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து இன்றுவரை 10 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, இன்று 12-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் இரண்டு அணுமின் நிலையங்களையும், முக்கிய நகரங்களையும் ரஷியா கைபற்றியுள்ளது.

உக்ரைனில் நேற்று 11-வது நாளாக ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன்  மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் பல தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷியா போரை நிறுத்தவில்லை. ரஷியாவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பல உலக நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத்தடைகள் விதித்து வருகின்றன.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலின் காரணமாக, அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில், பிப்ரவரி 24 அன்று ரஷிய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்ததில் இருந்து  தங்கள் நாட்டிற்குள் நுழைந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக போலந்து எல்லைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி வரும் உக்ரைனியர்களை தங்க வைக்க போலந்தில் தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ரஷியாவின் தாக்குதலில் இருந்து தப்பித்து வரும்  உக்ரைன் மக்களுக்கு போலந்து ஆதரவளிக்கும் என அந்நாட்டின் உள்துறை மந்திரி மாரியுஸ் காமின்ஸ்கி ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K