வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் ஸ்டாலின் கூறும் ஆலோசனை

0
72
MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today
MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் ஸ்டாலின் கூறும் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய இடத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும், முகவர்களும் இருக்கிறார்கள்.அதனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது.

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றி அழித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் காதுகளைத் திருகி, தேர்தல் நடத்தும்படி கண்டிப்பான உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

அதன்பிறகும்கூட, முழுமையாகத் தேர்தலை நடத்தி மக்களைச் சந்திக்கும் துணிவின்றி, ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல், அதுவும் இரண்டுகட்டமாக வாக்குப்பதிவு என மாநிலத் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு செயல்பட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.

அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என ஒட்டுமொத்த நிர்வாகத்தையே பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் எனத் திட்டமிட்டு, அனைத்துவிதமான முறைகேடுகளையும் அதிமுக ஆட்சியாளர்கள் செய்த நிலையில், மக்களின் பேராதரவு திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இருப்பதால், தேர்தல் களத்தை நாம் தெம்பாகவே எதிர்கொண்டோம்.

தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாம் நீங்களும், தோழமைக் கட்சியின் தொண்டர்களும் ஓய்வறியாமல்-ஒருங்கிணைந்து பணியாற்றிய களங்கள் யாவும் நமக்கான வெற்றி முத்திரையை வாக்குப்பெட்டிக்குள் நிரம்பிடச் செய்திருக்கின்றன.

விளைந்திருக்கும் பயிரைக் கவனமாக அறுவடை செய்திட வேண்டும். ஒரு நெல்மணிகூட வீணாகிவிடக்கூடாது, ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை கடந்த மடலிலேயே நினைவுபடுத்தியிருந்தேன். அதற்கேற்ப கட்சியின் சட்டத்துறையும் செயலாற்றியது.

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஆளுந்தரப்பின் முறைகேடுகளை முறியடிக்கவும், வாக்குப்பதிவின் போது அவர்கள் நடத்தவிருக்கும் தில்லுமுல்லுகளைத் தடுத்திடவும் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளையும் அதனை முறையாகப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. “ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வாக்குகள் ஒரே பெட்டியில் போடப்பட்டிருப்பதால், அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்பதால் அதில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுத்திட வேண்டும்” என்பதே அந்த மனுவின் முக்கிய அம்சமாகும்.

அதனடிப்படையில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் 1995ல் உள்ள விதிகள் 60 முதல் 69 வரையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் முழுவதும் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். சிசிடிவி கேமரா மூலம் அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

வாக்குப்பெட்டிகளை, வாக்குகள் எண்ணும் வரை உரிய பாதுகாப்புடன் வைத்திட வேண்டும். வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தில் வேட்பாளர் அல்லது முகவர் அனுமதிக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த வழக்கு 2019 டிசம்பர் 30 அன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார். 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த முறைகேடுகளையும் அண்மையில் அதிமுக ஆட்சி நடத்திய கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் நடந்த வரைமுறையற்ற விதிமீறல்களையும் சுட்டிக்காட்டி வாதங்களை வைத்தார்.

அதுமட்டுமின்றி, முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த மையத்திற்குள் அத்துமீறல்கள் நடந்ததால், வாக்குப்பெட்டிகளில் இருந்த சீல் அகற்றப்பட்டும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விவரக்குறிப்புகள் சிதறிக் கிடந்ததையும், இதுகுறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் விளைவாக தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் இத்தகைய விதிமீறல்கள் நடைபெறாதபடி, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்திட உத்தரவிட வேண்டும் என்றும் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

திமுகவினரைத் தாக்கும்படி ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவரே பிரச்சாரம் செய்ததையும், முதல் கட்ட வாக்குப்பதிவில் பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி, திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திட உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை, சட்டத்திற்குட்பட்டவை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம், வாக்குகள் பதிவான சீட்டுகளை கேமராவில் பதிவு செய்ய மறுப்பதையும் திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியபோது, அதில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, திமுக கோரிக்கைகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் சட்டத்தின்படி அமைந்தவைதான் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்து, அதற்கான சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கினை முடித்து வைத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகளின் எதிர்பார்ப்பாகும். இதனை திமுக மட்டும் வலியுறுத்தவில்லை. பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள், நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டன.

அப்போது ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், “குறுகிய கால அவகாசமே இருப்பதால் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய முடியாது” எனத் தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதிகள், “வீடியோ பதிவுக்கு 2 நாட்கள் அவகாசம் போதாதா? ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது? தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்படவேண்டும்’‘ எனத் தெரிவித்ததுடன், வீடியோ பதிவு குறித்து தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்துள்ள மாநிலத் தேரதல் ஆணையம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்ற வழக்கில், வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய போதுமான அவகாசம் இல்லை எனத் தெரிவித்திருப்பதிலிருந்து அதன் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகிறது. இதனால், மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பாக செயல்படுகிறதா, ஆளுங்கட்சியின் தலையாட்டி பொம்மையாக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

அதுமட்டுமின்றி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து விசாரித்த வழக்கில் 30.12.2019 அன்று நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் தரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவுகள் மிக முக்கியமானவை.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு அறையிலும் இரு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அப்படிப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை (CCTV Footage) சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை அதிகாரியின் கையெழுத்து மற்றும் சீலுடன் 3 .1. 2020 மாலை 5 மணிக்குள் உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் (நீதித்துறை) அவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

பெறப்பட்ட அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடங்கிய பதிவினை நீதிமன்றப் பதிவாளர் (நீதித்துறை) தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். வாக்கு எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் (free and fair counting) நடத்திட வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த உத்தரவு மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இந்த 14 மாவட்டங்களுக்கான உத்தரவு மீதமுள்ள 13 மாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நீதியின் மாண்பு காக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருக்கிறது திமுக.

நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய இடத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும், முகவர்களும் இருக்கிறார்கள்.

உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என கவனித்து, ஆளுந்தரப்பின் அத்துமீறல்களையும் முறைகேடுகளையும் தடுத்திட வேண்டியது அவசியமாகும். திமுகவின் சட்டத்துறை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.

உயர் நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கையை மக்களின் தீர்ப்பும் நிச்சயம் நமக்கு வழங்கும். புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும்” என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam