மீண்டும் மஞ்சப்பை திட்டம்! தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

0
101

ஒரு பிளாஸ்டிக் பை பொது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் தான் இருந்தாலும் அவை மக்கிப்போவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதிகப்படியான இந்த பாஸ்டிக் மாசுபாடு காரணமாக, நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்து மேலும் கடல்வாழ் உயிரினங்கள் உட்பட நம்முடைய சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நம்முடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான சூழ்நிலையையும், இந்த பிளாஸ்டிக் மாசுபாடு உண்டாக்கி வருகின்றது.

ஆகவே இதனை கருத்தில் வைத்து ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. நோய்த்தொற்று பரவல் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தடையை நடைமுறைப்படுத்தும் விதத்தில் சுணக்கம் உண்டானது.

தற்போதைய தமிழக அரசு இந்த தடையை மறுபடியும் நடைமுறைப்படுத்துவதற்கு மிகத்தீவிரமாக பணிகளை ஆரம்பித்திருக்கிறது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணி வகைகளையும், நாம் உபயோகிக்கும் பழக்கத்தையும், பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதே மறுபடியும் மஞ்சப்பை பரப்புரையின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைக்க இருக்கிறார். இதில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

அதோடு இந்த நிகழ்ச்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்திருக்கின்ற கலைவாணர் அரங்கில் இன்று வைக்கப்பட இருக்கிறது.

ஆகவே பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சி இன்று மாலை 7 மணி வரையில் பொதுமக்கள் பார்வையிட்டு அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.